பெண்கள் 360: வீட்டு வேலைக்கு முடிவு கட்டிய தீர்ப்பு

By கார்த்திகா ராஜேந்திரன்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவானா மோரல் என்பவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வீட்டு வேலை செய்வதற்காகவே தன்னைத் திருமணம் செய்துகொண்டிருப்பதாக கணவர்மீது புகார் வைத்த இவானா, 25 ஆண்டுகளாக இந்த வேலையை மட்டும்தான் செய்துவந்ததாகத் தெரிவித்தார். இருவரும் சம்பாதித்த பணம் மொத்தமும் கணவருக்குத்தான் சென்றதாகவும், இதுவரை தனக்கென்று எந்தப் பணமும் அவர் அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து அளித்து இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், இதுவரை இவானா செய்த வீட்டு வேலைகளுக்காகவும் அவரது கணவர் 1.75 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஸ்பெயின் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

சர்வதேச உழைக்கும் மகளிர் நாளும் ஹோலிப் பண்டிகையும் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டன. ஹோலி கொண்டாட்டத்தின்போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளைச் சுட்டிக்காட்டி பிரபல திருமணத் தகவல் சேவை இணையதளமான பாரத் மேட்ரிமோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்தது. “ஹோலி கொண்டாட்டத்தின்போது சந்திக்கும் பாலியல் சீண்டல்களால் பெண்கள் பண்டிகையைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். இந்த ஹோலி தினத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்” என்கிற செய்தியுடன் வெளியிடப்பட்ட காணொளி வைரலானது. “புனிதப் பண்டிகையான ஹோலி தினத்தில் மட்டும்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? இந்துப் பண்டிகையைக் கொச்சைப்படுத்தும் செயல் இது” என நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் விமர்சனங்களை முன்வைத்து #BoycottBharatMatrimony என்கிற ஹாஷ்டேகை டிரெண்ட் செய்தனர். இது ஒரு புறம் இருக்க, “சர்ச்சையாகும் எனத் தெரிந்தும் உண்மையை உரக்கச் சொன்னதுக்கு பாரத் மேட்ரிமோனிக்குப் பாராட்டுகள்” எனவும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

செளர்ய சக்ரா விருதாளர் ஜஸ்வந்த் கவுர் மறைவு

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீர விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஹரியாணா மாநிலம் ஷாகாபாத்தில் வசித்து வந்த ஹர்னம் சிங் என்பவரது குடும்பத்தினர்மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் மகன், மருமகள் இறந்துவிட ஹர்னம் சிங், அவரது மனைவி ஜஸ்வந்த் கவுர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினர். தீவிரவாதிகளுக்கு எதிராக அச்சமின்றி போராடிய இந்த குடும்பத்தினருக்கு 1991ஆம் ஆண்டு செளர்ய சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன. 2013ஆம் ஆண்டு ஹர்னம் சிங்கின் மறைவுக்குப் பிறகு தனது மகனுடன் வசித்து வந்த 93 வயதான ஜஸ்வந்த் கவுர் உடல் நலக்குறைவால் கடந்த வாரம் மறைந்தார். இவருக்கு ஷாகாபாத்தைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE