ஒருபால் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் தரக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 17 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஐவர் கொண்ட அமர்வு, திருமணம் போன்ற விவகாரங்கள் மீதான சட்டத் திருத்தத்தை மத்திய, மாநில அரசுகளே முடிவுசெய்யும் எனத் தீர்ப்பளித்தது.
தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “தன் பால் உறவு என்பது இயற்கையானது. பால் புதுமையினர், அவர்களது பாலின அடையாளத்துக் காகவோ பாலியல் தேர்வுக்காகவோ ஒடுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. பால்புதுமையர் சமூகத்தினர் நகர்ப்புற மேல்தட்டுவாசிகள் என மத்திய அரசு தெரிவித்த கருத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தன் பால் உறவு குறித்து பொதுமக்களிடம் ‘பியூ’ அமைப்பு நடத்திய ஆய்வில் 58 சதவீதத்தினர் தன் பாலின உறவை அங்கீகரித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வோடு ஒப்பிடுகையில் தன்பாலின உறவுக்கான ஆதரவு 38 சதவீதம் அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்தபோதும் தன் பாலினத் திருமணங்கள் சட்ட ரீதியான அங்கீகாரத்தை விரைவில் பெறும் என்கிற நம்பிக்கை தெரிகிறது.