மூடத்தனத்தால் பறிபோன உயிர்

By Guest Author

வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதில் 27 வயது லோக நாயகி என்பவர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரும் இவருடைய கணவர் மாதேஷும் முதுகலைப் பட்டதாரிகள். இயற்கை விவசாயத்திலும் ஆரோக்கிய உணவிலும் ஆர்வம் கொண்ட இவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவெடுத்துள்ளனர். ஆகஸ்ட் 22 அதிகாலை லோகநாயகிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி முழுவதும் வெளியேறாத நிலையில் அதை வெளியேற்ற குடும்பத்தினர் முயன்றுள்ளனர். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு லோகநாயகி உயிரிழந்தார்.

லோகநாயகிக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்த தகவல் உள்ளூர் டீக்கடைக்காரர் மூலம் கிராம சுகாதாரச் செவிலிக்குத் தெரியவந்த பிறகே, இது குறித்து மருத்துவ அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய இரும்புச் சத்து மாத்திரைகளை லோகநாயகி தவிர்த்ததுடன் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறார். பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட்டாலே போதும் என்று மருத்துவத்துக்கு எதிரான கருத்துகளையும் இந்தத் தம்பதி பரப்பியுள்ளனர். யூடியூப் காணொளியின் வழிகாட்டலில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது.

பெண்களின் பேறுகால நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மாநிலத்தின் எந்த அரசு மருத்துவமனையிலும் பேறுகால சிகிச்சை பெறும்வகையில் கர்ப்பிணிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றன. சத்து மாத்திரைகள், பேறுகாலப் பணப் பலன், குழந்தைப்பேறுக்குப் பிந்தைய பரிசுப் பெட்டகம் எனப் பலவும் அதில் அடங்கும். லோகநாயகிக்கும் அவருடைய கணவர் ஊரான தர்மபுரியில் உள்ள ஹனுமந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரும்புச் சத்து மாத்திரைகளும் சத்துணவு அட்டவணையும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர் தன் இருப்பிடம் குறித்த தகவல்களை மறைக்கத் தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக தர்மபுரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்த லோகநாயகியின் கணவர் மாதேஷ் மறுத்துள்ளார். அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையும் இயற்கை வாழ்க்கை மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையும் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்திருக்கின்றன. இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்க்கை போன்றவற்றின் பெயரால் அறிவியலுக்கு எதிரான மனப்பான்மை அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது. யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதில் திருப்பூரைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் 2018இல் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்களைப் பார்த்த பிறகும் படித்தவர்கள்கூட மருத்துவம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் நடந்து கொள்வதைத்தான் லோகநாயகியின் மரணம் உணர்த்துகிறது.

- கிருஷ்ணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE