வருகிறது ஸ்மார்ட் தையல்

By ரஷிதா சபுரா.மு

ஸ்மார்ட் கடிகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஸ்மார்ட் தையல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்மார்ட் தையல்கள் (smart sutures) குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது அவர்களது கண்டுபிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

காயத்திற்குத் தையல் போடுவது மட்டுமல்லாமல், காயம் குணமடைவதைக் கண்காணித்துத் தேவைப்படும் இடங்களுக்கு மருந்தைக் கொண்டு சேர்க்கும் பணியையும் ‘ஸ்மார்ட் தையல்கள்’ செய்கின்றன. இந்த ஸ்மார்ட் தையல்கள் பன்றித் திசுக்களால் உருவாக்கப்பட்டவை. மருந்துவர்கள் இந்தத் திசுக்களைச் சோதித்து, அவை சுத்தமான நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்த பிறகே அவை பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்மார்ட் தையல்கள் காயத்துக்குத் தேவையான மருந்துகளோடு சிறிய சென்சாரையும் (sensors) கொண்டுள்ளன. இதன் மேற்புறத்தில் ஜெல் பூசப்பட்டு இருக்கும்.

சென்சாரின் பணி

தையல் போடுவதால் ஏற்படும் தோல் பிரச்சினைகள், காயத்தின் நிலை போன்றவற்றை சென்சார்கள் எளிதாகக் கண்டறிகின்றன. பின்னர் அதற்குத் தேவையான மருந்தை அவை கொண்டு செல்கின்றன. இவ்வகையான ஸ்மார்ட் தையல்கள், புற்று நோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹீமோ தெரபியில் மருந்துகளை கொண்டு செல்லவும் பயன்படுகின்றன.

மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின் உடலில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கவும் ஸ்மார்ட் தையல்கள் உதவுகின்றன.

ஸ்மார்ட் தையல்கள் அறுவைசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டால் காயங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் குணம் அடையும் சூழல் ஏற்படலாம்.

ஸ்மார்ட் தையல்கள், மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE