ஏடிஹெச்டி என்றால் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

By ரா.நதியா

’அட்டென்ஷன் டிஃபிளிக்ட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ்ஸார்டர்’ (Attention deficit hyperactivity disorder) குறைபாடு பெரும்பாலும் குழந்தை பருவத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இது கவனக் குறைவு, மிகை இயக்கம், சிந்தித்து செயல்படாமை என்கிற மூன்று வகைகளை கொண்டுள்ளது.

காரணம்: ஏடிஹெச்டி உளவியல் சார்ந்த பிரச்சினையாக கருதப்படுகிறது. உலகளவில் 7.2% குழந்தைகள் இக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நரம்பு மண்டலம், வளர்ச்சி அடையும் பருவத்தில் ஏற்படும் சில மாறுதல்களால் ஏடிஹெச்டி குறைபாடு உண்டாகிறது . மரபியல் ரீதியாகவும் இந்நோய் அடுத்த தலைமுறைக்கு கருதப்படுகிறது.

வகைகள்: ஏடிஹெச்டி குறைபாட்டினை மருத்துவர்கள் மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். அவை: கவனக் குறைபாடு (Attention deficit); மிகை இயக்கம் (Hyper activity); சிந்தித்து செயல்படாமை ( Impulsive behavior)

கவனக் குறைபாடு (Attention deficit): இக்குறைபாட்டையுடைய குழந்தைகளுக்கு கூர்மையாக கவனிக்கு திறன் சற்று குறைவாக இருக்கும். செய்யும் வேலையில் கவனமில்லாமல் இருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு வேலையை செய்துக் கொண்டிருக்கும்போது அதை பாதியிலே விட்டுவிட்டு மற்றொரு வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

மிகை இயக்கம் (Hyper activity): ஒரிடத்தில் அமராமல் எப்போதும் மிகை ஓட்டத்துடனே காணப்படுவார்கள். சம்பந்தம் இல்லாமல் தொடர்ந்து பேசி கொண்டே இருப்பார்கள். இயல்பாக உள்ள குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. இக்குழந்தைகள் பிறர் கவனத்தை ஈர்க்க அதீத செயல்பாடுகளை உடையவர்களாக இருப்பர்.

சிந்தித்து செயல்படாமை ( Impulsive behavior): குழந்தைகள் பேசுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. அடுத்தவர் பேசும்போது இடைமறித்து பேச முயல்வார்கள். ஆபத்தான செயல்களில் ஈடுபட விரும்புவார்கள். அதிகமாக கவனச் சிதறல்களுக்குள்ளாவார்கள்.

என்ன பாதிப்பு? - பொதுவாக கவனக் குறைபாட்டினால் (Attention Deficit) பெண் குழந்தைகளும், மிகையியக்கம் குறைபாட்டினால் ( Hyper Activity) ஆண் குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஏடிஹெச்டியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, தன்னம்பிக்கை குறைபாடு, கவனக் குறைப்பாடுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அச்ச உணர்வு, புதியவற்றை கற்றுக் கொள்வதில் சிக்கல், ஆற்றல் குறைபாடு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றாலும் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும்.

தீர்வு: பொதுவாக இக்குறைபாடுகள் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. எனவே இதைக் கண்டு பெற்றோர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. முதல் ஆறு மாதத்திற்கு குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்; ஆறு மாதங்களுக்கு மேலாக மேற்குறிய அறிகுறிகள் குழந்தைகளிடம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுகலாம்.

ஏடிஹெச்டி குறைபாட்டுக்கு முறையான உளவியல் மருத்துவரை அணுகி, ஆலோசனைகள், சிகிச்சைகள் எடுத்து கொள்வதன் மூலம் விரைவில் குணமாகலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE