அல்பட்ராஸ் ஏன் உப்பு நீரைக் குடிக்கிறது?

By ஆதன்

உலகின் மிகப் பெரிய கடல் பறவைகளில் ஒன்று அல்பட்ராஸ். இவற்றில் 22 இனங்கள் இருக்கின்றன.

உடல் பெரும்பாலும் வெள்ளை இறகுகளுடன் காணப்படும். இறக்கைகளில் கறுப்பும் சாம்பல் வண்ணமும் இருக்கும். தடிமனான, நீண்ட, உறுதியான அலகு இருக்கிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணங்களில் அலகுகள் காணப்படுகின்றன.

அல்பட்ராஸுக்கு மிக நீளமான இறக்கைகள் உண்டு. அந்தப் பெரிய இறக்கைகளை அசைக்காமல் பல மணிநேரம் கடலுக்கு மேலே பறந்து செல்லும். சுமார் 12 அடி நீளம் இருக்கும் இறக்கைகளை அடிக்கடி மடக்க இயலாது. அதனால் தரைப்பகுதிக்கு வரும்போதுதான் இறக்கைகளை மடக்கும். மணிக்கு சுமார் 80.47 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

10 கிலோ எடை கொண்டதாக இருந்தாலும் அல்பட்ராஸால் தண்ணீரில் மிதக்க முடியும். 50 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது.

அல்பட்ராஸின் முக்கிய வாழிடம் கடல். ஒரு நாளின் பெரும்பகுதியைக் கடலுக்கு மேலே, நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்துக்கு, உணவு தேடி பறந்துகொண்டே இருக்கும்.

அல்பட்ராஸ் கடல் நீரைக் குடிக்கும். உணவைச் சாப்பிடும்போதும் உப்பு நீர் உள்ளே செல்லும். இவ்வாறு கூடுதலாக உடலில் சேரும் உப்பை, கண்களுக்கு மேலிருக்கும் சுரப்பி மூலம் வடிகட்டி வெளியேற்றிவிடும்.

ஆண் அல்பட்ராஸை விடப் பெண் ஆல்பட்ராஸ் உருவத்தில் சிறியது.

சிறிய கணவாய், மீன், மிதவை உயிரிகள் போன்றவை அல்பட்ராஸின் முக்கிய உணவு. தண்ணீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்கும். நீரின் மேற்பரப்புக்கு வரும் மீன்களைப் பறந்துகொண்டே பிடித்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE