பறவைகள் உணவை விழுங்குவது ஏன்?

By ஆதன்

பூமியில் சுமார் 10 ஆயிரம் வகையான பறவை இனங்கள் உள்ளன. அவை அளவிலும் நிறத்திலும் உருவத்திலும் எடையிலும் பழக்கவழக்கங்களிலும் வேறுபடுகின்றன.

அனைத்துப் பெண் பறவைகளும் முட்டையிடும். முட்டைகளும் அளவிலும் வண்ணத்திலும் வேறுபடுகின்றன.

மரக்கிளை அல்லது உயரமான இடங்களில் கூடுகளைக் கட்டி, பெரும்பாலான பறவைகள் முட்டைகளை இடுகின்றன. சில பறவைகள் நிலத்தில் முட்டையிட்டு அடைகாக்கின்றன.

முட்டைகளை பெண் பறவை மட்டுமோ ஆண், பெண் பறவைகள் சேர்ந்தோ அடைகாக்கின்றன.

குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு குஞ்சுகள் வெளிவரும்.

பறவைகள் உணவுத் தட்டுப்பாடு, அதிகமான குளிர் போன்ற காரணங்களுக்காக ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கோ, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கோ வலசை செல்கின்றன. சுமார் 4 ஆயிரம் பறவைகள் இப்படி இடம்பெயர்கின்றன.

அனைத்துப் பறவைகளுக்கும் இறக்கைகள் உண்டு. இந்த இறக்கைகள் பல்வேறு விதங்களில் பறவைகளுக்குப் பயன்படுகின்றன. பறவைகள் பறக்க உதவுகின்றன. அவை பறக்கும்போது காற்றைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குளிர்காலத்தில் பறவைகளைச் சூடாக வைத்திருக்கின்றன.

பறவைகளுக்குப் பற்கள் இல்லை. அதாவது, அவை உணவை முழுவதுமாக விழுங்குகின்றன. பறவைகளின் குடல் பையில் அரைக்கும் உறுப்பு (gizzard) இருக்கிறது. இது முழுவதுமாக விழுங்கும் உணவை ஜீரணிக்க உதவுகிறது.

பறவைகள் விதவிதமாகக் குரல் எழுப்பக் கூடியவை. இணையை அழைப்பதற்காகவும் ஆபத்தை மற்ற பறவைகளுக்குத் தெரிவித்து எச்சரிப்பதற்காகவும் குரல் எழுப்புகின்றன.

பறவைகள் பொதுவாக கூட்டமாக வசிக்கின்றன. கூட்டமாகவே பயணிக்கின்றன. இப்படிச் செல்லும்போது பாதுகாப்பாக உணர்கின்றன.

நெருப்புக்கோழி மிகப் பெரிய பறவை. ஆனால், பறக்க முடியாது. நன்றாக ஓடும். இது மிகப் பெரிய முட்டைகளை இடக்கூடியது. ரீங்காரச் சிட்டு மிகவும் சிறியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE