சில்லுன்னு ஒரு மூடி

By ரோஹின்

பாட்டில் டிரிங்ஸ் குடிச்சிருப்பீங்க, அது மேல உள்ள மூடியைத் திறக்க என்ன பண்ணுவீங்க? ஓபனரை வாங்கி ஸ்டைலா திறப்பீங்க இல்லையா? திறந்தபோது தூரப் போய் விழும் அந்த மூடி. அதன் பின்னால் சிறிது போவோமா?

பாட்டிலை இறுக்கமாக மூடியிருக்கும் அந்த மூடி மட்டும் இல்லாவிட்டால் குளிர்பானங்களை இவ்வளவு பத்திரமாக அதிகத் தூரங்களுக்கு அனுப்ப முடியுமா? முடியாது அல்லவா? பாட்டிலைப் பல இடங்களுக்கும் அனுப்ப உதவியது நாம் தூக்கி எறியும் அந்தச் சாதாரண மூடிதான். இந்த மூடியின் கண்டுபிடிப்பு பொதுவாக யோசித்தால் மிகச் சாதாரணதாகத் தோன்றலாம். ஆனால் இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு. இந்த மூடி கண்டுபிடிப்பதற்கு முன்னால் சோடா பானங்களை மூடுவதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். மூடியைக் கண்டுபிடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் பெயிண்டர் என்னும் இன்ஜினீயர்.

1880களில் மக்கள் சோடாபானங்களை மிகவும் விருப்பத்துடன் அருந்தி மகிழ்ந்திருக்கிறார்கள். சோடாபானங்களை அருந்தும் பழக்கம் விரைவாக அனைத்துத் தரப்பினரிடமும் பரவியுள்ளது. தொடக்கத்தில் குளிர்பானக் கடைகளிலும்பப்களிலும் மட்டுமே இந்த சோடா கிடைத்துள்ளது. சோடா பாட்டிலுக்குச் சரியான மூடி இல்லாததால் வெளியில் எடுத்துச் செல்வது கடினமாக இருந்துள்ளது. ஆனாலும் தொடக்கத்தில் சில உலோகத் தக்கைகள் மூலம் மூடி வெளியே எடுத்துச் சென்றுள்ளார்கள். கார்பன் டை ஆக்ஸைடைக் கொண்ட பானங்கள் நுரையை ஏற்படுத்திக்கொண்டே இருந்ததால் தக்கை மூடிகள் சரியான பாதுகாப்பை வழங்கவில்லை.

மேலும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. சோடாவில் உலோகத் தக்கை படுவதால் ஏற்பட்ட வேதி வினையால் மென்பானத்தில் நச்சுத்தன்மை உருவாகி, குடிக்க முடியாதபடி கெட்டுப்போய்விடும். இந்த ஆபத்தைக் களைய வேண்டியது அவசியமாகிவிட்டது.

இந்தச் சூழலில் வில்லியம் பெயிண்டர் 1891-ம் ஆண்டில் சோடா பானங்களை மூடும் மூடியைக் கண்டுபிடித்தார். பாட்டிலின் மேல்பகுதியுடன் நன்கு பொருந்திப்போகும்படி இருந்தது இந்த மூடி. இதில் சோடா பானத்திற்கும் மூடியின் உலோகத்திற்கும் இடையில் மெல்லிய தகடு போன்ற தக்கை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் உலோக முமூடியும் பாட்டிலில் உள்ள சோடாவும் ஒன்றை ஒன்று தொடாமல் தடுக்கப்பட்டது. இந்த மூடியை பெயிண்டர் க்ரௌன் கார்க் எனப் பெயரிட்டு அழைத்துள்ளார்.

தொடக்கத்தில் 24 பற்களைக் கொண்டிருந்த இந்த மூடியைப் பாட்டிலுடன் பொருத்தும்போது முறையாகக் கையாளாவிட்டால் பாட்டில் உடைந்துபோனது. மேலும் மூடிகள் பொருந்த வாகாகப் பிரத்யேகமான பாட்டில்களை உருவாக்க வேண்டியிருந்தது.

இந்தச் சவாலுக்கும் பெயிண்டர் 1898-ல் விடை கண்டார். பாட்டிலில் மூடியைப் பொருத்த கால்கள் உதவியுடன் இயங்கும் ஒரு கருவியை உருவாக்கினார். அதை சோடா விற்பனையாளர்களுக்கு விற்றார். இந்தக் கருவியால் பாட்டில்களில் மூடியைச் சரியான அழுத்தத்தில் மிகவும் எளிதாகப் பொருத்த முடிந்தது. பின்னர் வில்லியம் பெயிண்டர் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கினார். பாட்டில்களைத் திறக்க உதவும் ஓபனரையும் இவர் தான் 1894-ல் உருவாக்கினார். கிரௌன் கேப், பாட்டில் ஓபனர் உள்ளிட்ட சுமார் 80 கண்டுபிடிப்புகளுக்கு வில்லியம் பெயிண்டர் காப்புரிமை பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்