இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற சாதனையைப் படைத்தது இந்தியா. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடித் தீர்த்தனர். இணைய உலகம் முழுவதும் சந்திரயான்-3 பதிவுகளால் நிறைந்திருந்தது.
ஆனால், வழக்கம்போல் தங்கள் பாணியில் மீம்ஸ்களை வெளியிட்டும் கவனிக்க வைத்தனர் மீம் கிரியேட்டர்கள். ‘நிலாவில் ஒரு பாட்டி இருந்துச்சாம்...’ என்று தொடங்கும் இந்தக் கதையைச் சிறு வயதில் கேட்காதவர்களே இருக்க முடியாது.
சந்திரயான் நிலவில் தரை இறங்கியவுடன் அந்தப் பாட்டிக் கதையை நினைவுகூர்ந்து சந்திராயன் மீம்களைப் பலரும் வெளியிட்டிருந்தனர். ரசிக்கத்தக்க வகையில் இருந்த இந்த மீம்களும் இணையத்தில் வைரலாயின.
‘பெண்கள் முகம் நிலவைப் போல’ என்பது போன்ற காதல் கவிதைகள் பிரபலம். தற்போது சந்திரயான் அனுப்பியிருக்கும் நிலவின் ஒளிப்படத்தைப் பார்த்து, காதல் மன்னர்கள் நொந்துகொண்ட மீம்ஸ்களும் இணையத்தைச் சுற்றி வருகின்றன.