கோலிவுட் ஜங்சன்: ஜி.வி.பி - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணி!

By செய்திப்பிரிவு

புதிய புதிய கதாநாயகிகளுடன் நடித்துக் கலக்கும் ஜி.வி.பிரகாஷ், முதல் முறையாக ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிப்பதுடன், படத்துக்கும் இசையமைக்கிறார். ‘டியர்’ எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ள இப்படத்தை எழுதி, இயக்குபவர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

இவர் ஏற்கெனவே ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்கிற படத்தை இயக்கியவர். ‘டியர்’ படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி எனப் பலர் நடித்து வருகிறார்கள். குடும்பப் பொழுதுபோக்குப் படமாகத் தயாராகும் இதனை, நட்மெக் புரொடக் ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம், பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

சுழலும் சரத்குமார்! - ‘வாரிசு’ படத்தில் அடங்காத பிள்ளையான விஜயின் அப்பா, ‘ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு சவால் விடும் வித்தியாசமான வில்லன் என சரத்குமார் பல வகை வேடங்களில் நடித்து வந்தாலும் ‘பொன்னியின் செல்வன்’ பழுவேட்டரையரே முன்னால் வந்து நிற்கிறார்.

தற்போது நடித்துவரும் படங்கள் குறித்து பேட்டியளித்த சரத்குமார், “நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் போல் இருக்கிறது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ்தான் பேசி வருகிறேன். கலை உலகிலிருந்து கொஞ்சக் காலம் ஒதுங்கி இருந்தேன், தற்போது திரைப்படங்கள், இணையத் தொடர்கள் உட்பட 22 படைப்புகளில் பம்பரமாகச் சுழன்று நடித்து வருகிறேன். சாதாரண வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன். கலைதான் என் தொழில்.” என்றார்.

காவல் துறையின் உதவி! - ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ படங்களுக்குப் பிறகு ஜெய்வந்த் நடித்திருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’. படம் குறித்து அவர் கூறும்போது “சத்யராஜ் என்கிற ஆளுமையுடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை. புகார்களின் வேர்களைத் தேடிச் செல்லும் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

‘மல்டி ஸ்டாரர்’ படம் என்பதால் எனது திறமையை வெளிக்காட்ட நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்தப் படத்துக்குத் தமிழ்நாடு காவல்துறையின் பங்களிப்பு அதிகம். அதனால், காவல் துறையைப் பெருமைப்படுத்தும் பாடல் ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டு படங்களிலும் ஓர் இணையத் தொடரிலும் நடித்து வருகிறேன்” என்றார்.

காதல் படும்பாடு! - ஷங்கரின் உதவியாளர் கார்த்திக், ‘கப்பல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரது இரண்டாவது படம் ‘டக்கர்’. இதில் சித்தார்த் நாயகன். அவருக்கு ஜோடியாக திவ்யான்ஷா அறிமுகமாகிறார்.

“பணக்காரனாக ஆகியே தீருவது என்கிற நோக்கத்துடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ஏழை எளிய இளைஞர் சித்தார்த்தும், யாருடையக் கட்டுப்பாட்டிலும் இருக்க விரும்பாத செல்வந்தரின் மகளான நாயகியும் எதிர்பாராத சூழ்நிலையில் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அந்தப் பயணத்தில் காதலுக்கு இடமிருந்ததா, இல்லையா, காதல் என்ன பாடுபடுகிறது என்பதுதான் கதை. சென்னை, சிக்கிமில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE