படிப்பு ஏறாமல் பிரபல ஹீரோவின் ரசிகர் மன்றத் தலைவராக வலம் வருகிறார் முருகன் (ராஜன் சுரேஷ்). அப்பாவின் உழைப்பில் வயிறு முட்ட வசைகளையும் சேர்த்துச் சாப்பிடும் தண்டச்சோறாக இருக்கும் அவருக்குள் புகுந்துவிடுகிறது காதல். அதற்குக் காரணம் அதே பகுதியில் வசிக்கும் அமுதா (அர்ஷிதா).
தன்னைப் பாதித்த திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து தன் ஒருதலைக் காதல் உல கத்துக்கான முஸ்தீபுகளை உருவாக்கிக் கூச்சமே இல்லாமல் அவற்றைப் பிரயோகிக் கிறார் ராஜன். இதில் அவரைச் சார்ந்தவர்களும் அர்ஷிதாவும் படாதபாடு படுகிறார்கள். முருகனைத் துரத்தி அடிக்க அர்ஷிதா எல்லா உத்திகளையும் கையாள்கிறார். எதற்கும் அசைந்து கொடுக்காத இந்தக் காதல் இறுதியில் என்னவானது என்பதுதான் கதை.
தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் காத லையே பரிகசித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் நாகராஜன். அதற்கேற்ப, நாயகனை ஒரு நடிகரின் தீவிர ரசிகராகக் காட்டியிருக் கிறார். நாயகன் தனது வெகுஜன சினிமா ரசனையையே வாழ்க்கையாகவும் மாற்றிக் கொண்டு உலா வருவதில் நிமிடத்துக்கு நிமிடம் நம்மைச் சிரிக்க வைத்துவிடுகிறார். படம் முழுவதும் பகடிகளால் நிரம்பி வழியும் வெடிச் சிரிப்புகளின் கொண்டாட்டமாக உள்ளது.
ஆபாச நகைச்சுவையை அடியோடு தவிர்த் திருப்பதன் மூலம் நம்பிக்கை தரும் இயக்குந ராக வெளிப்பட்டிருக்கிறார் நாகராஜன். நகைச்சுவை கலட்டாக்களுக்கு மத்தியில் பெண்களுக்காகப் பரிந்து பேசியிருப்பதும் பாராட்டத்தக்க விதத்தில் உள்ளது.
நட்சத்திரத் தேர்வுக்காக இயக்குநருக்குத் தனியாக சபாஷ் போடலாம். முருகனாக நடித்திருக்கும் ராஜனின் வசன உச்சரிப்பையும் பகடியின் ஊடக வடிவமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். காதலைச் சொல்வதற்கு அவர் பயன்படுத்தும் வசனங்களும் அவற்றைச் சொல்லும் விதங்களும் திரைப்படங்களை நினைவுபடுத்தும் விதமே நகைச்சுவைக்கு உத்தரவாதமளித்துவிடுகிறது. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு வசனம் பேசி நடித்து வெளுத்துக் கட்டியிருக்கிறார் அறிமுக நாயகன் ராஜன் சுரேஷ்.
அமுதாவாக நடித்திருக்கும் அர்ஷிதா பக்கத்து வீட்டுப் பெண்போன்ற பாந்தம், அழகு ஆகியவற்றுடன் நடிப்பு, நடனத் திறமை ஆகியவற்றையும் கொண்டிருக்கிறார். பட்டிமன்றப் புகழ் ராஜாவின் டைமிங் சென்ஸும் வசன உச்சரிப்பும் நன்று.
காட்சிகள் பெரும்பாலும் வசனம் வழியே நகர்ந்து சென்றாலும் காட்சி மொழி குன்றாமல் படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஜே.கே.கல் யாணம் படத்துக்கு முதுகெலும்பு. ராஜன் மகாதேவின் இசையில் இரண்டு கானா பாடல்கள் உட்பட அனைத்துப் பாடல்களும் நன்றாக இருப்பதுடன் கதைப்போக்குக்கு உதவியாகவும் இருக்கின்றன. பின்னணி இசையும் நகைச்சுவைப் படத்துக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
கிளைமாக்ஸ் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது ஏமாற்றமளித்தாலும் தரமான நகைச் சுவைக்காக இப்படத்தை வரவேற்கலாம்.