தென்னிந்திய சினிமாவில் மாற்றுப் பாலினத்தவர்கள் பலர் ஒப்பனைக் கலைஞர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் நடிப்பு என வரும்போது அவர்களைக் கறிவேப்பிலைகளாக பயன்படுத்தி வந்த நிலையே நீடித்தது.
ஆனால் தற்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த திருநங்கையான அஞ்சலி அமீருக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்தன.
தற்போது இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக , அருண் என்பவர் இயக்கும் ‘தெய்வத்திண்டே மணவாட்டி’ என்ற மலையாளப் படத்தில் எலிசபெத் ஹரிணி சந்தனா என்ற திருநங்கையை கதாநாயகியாகவே, ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள்.
‘ஞான் மேரிக்குட்டி’ படத்தில் மாற்றுப் பாலினத்தவராக நடித்து தேசியவிருது வென்ற ஜெயசூர்யாதான் இந்தப் படத்தின் கதாநாயகன். படத்தின் ‘முதல் பார்வை’ வெளியாகி மலையாளப் படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரை நடிப்பிலும் மாற்றுப் பாலினத்தவர் களம் காணும் காலம் இது.