ஊதியம் வாங்காத ரேவதி! - சினிப்பேச்சு

By செய்திப்பிரிவு

சமூகத்துக்கு விழிப்புணர்வு தரும் படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்கிற கொள்கை கொண்டவர் ரேவதி. அதே நோக்கம் கொண்ட படங்களுக்கு உதவவும் தயங்க மாட்டார். ‘டபுள் டக்கர்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் தீரஜ். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில், அவர் அடுத்து நடித்துள்ள படம் ‘பிள்ளையார் சுழி’. அதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள ரேவதி, இப்படத்தில் நடித்தற்காக ‘ஒரு ரூபாய்கூட ஊதியம் வாங்கமாட்டேன்; இப்படத்தில் நடிப்பது என் கடமை’ எனக் கூறி மறுத்துள்ளார்.

தீரஜ், அபிநயா, மைம் கோபி உள்ளிட்ட பலருடன் 7 வயது ஆட்டிசக் குழந்தையான உன்னி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். படம் குறித்து தீரஜ் கூறும்போது, “நான் இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்தது பணம் சம்பாதிக்க அல்ல. மாறாக நல்ல கதைகளில் நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒரு கலைஞனாகப் பெயர் பெற விரும்புகிறேன்.

இன்றைக்கு மாற்றுப் பாலினத்தவர் பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மகத்தானது. ஆனால் ஆட்டிசக் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு அதுபோன்ற குழந்தைகளைப் பாதுகாத்து அன்பு செலுத்தும் பெற்றோர்களுக்கு இல்லை, பொதுச் சமூகத்துக்கும் இல்லை. அதற்கு ‘பிள்ளையார் சுழி’ போடும் படைப்பு இது. இப்படத்தில் எனது மகனை அடிப்பதுபோல் காட்சி. நான் முடியாது என்று இயக்குநரிடம் மறுத்தேன். ஆனால், உண்மையாக அடிக்க வேண்டும் என்று இயக்குநர் என்னை வற்புறுத்தினார். குழந்தையை அடித்துவிட்டு நான் பல நாள் அழுதேன். ரேவதியின் பங்களிப்பு இந்தப் படத்தை உயர்த்திவிட்டது” என்றார்.

விமல் ரசிகன் விஜய்சேதுபதி! - வில்லன், குணச்சித்திரம் என நடிப்பால் கவர்ந்து வரும் போஸ் வெங்கட் எழுதி, இயக்கிய படம் ‘கன்னி மாடம்’. அதைத் தொடர்ந்து விமல் நாயகனாக நடித்துள்ள ‘சார்’ படத்தை இயக்கியிருக்கிறார். எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் நடந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் விஜய்சேதுபதி, வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விமல் பேசும்போது “‘வாகை சூடவா’ படத்துக்குப் பிறகு எனக்குப் பெயர் சொல்லும் படமாக ‘சார்’ அமையும். வெற்றிமாறன் சார் இந்தப் படத்துக்குள் வந்த பிறகுதான், முழுமையான ‘சார்’ ஆகியிருக்கிறது. என்னை எப்போதும் ஊக்கம் தந்து தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதிக்கு நன்றி” என்றார். விஜய் சேதுபதி பேசும்போது, “கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன்.

இது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். போஸ் வெங்கட்டை அவர் டிவி சீரியல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அதிலேயே தேங்கி விடாமல், சினிமாவுக்கு வந்து, இப்போது இயக்குநராகத் தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார். நான் படத்தைப் பார்த்து விட்டேன், கடைசி 40 நிமிடங்கள் உங்களை உலுக்கிவிடும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE