சினிப்பேச்சு | ‘கடைசி உலகப்போர்’ ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

தமிழ் சொல்லிசை முன்னோடிகளில் முக்கியமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் திரையுலகில் இசையமைப்பாளர், நாயக நடிகர், இயக்குநர் என அடுத்தடுத்த நிலைகளில் தொடர் வெற்றிகள் கொடுத்து வருகிறார்.

தற்போது, ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கித் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். அவர் எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்து, முதல் முறையாகத் தயாரித்திருக்கும் படம் ‘கடைசி உலகப் போர்’.

மாறுபட்ட கதைக் களத்தில் போரின் விளைவுகளைப் பிரம்மாண்டக் காட்சியமைப்புகள் வழியாகச் சித்தரித்துள்ள இப்படம், வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் சுந்தர்.சி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள அனகா, நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டி, இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள், ‘மகாராஜா’ புகழ் சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், முனிஸ்காந்த், கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், சிவா சாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அரசியல் நையாண்டியில் கௌதம் கார்த்திக்: மணி ரத்னத்தின் அறிமுகமாக கோலிவுட்டில் கால் பதித்தவர் கௌதம் கார்த்திக். கடந்த ஆண்டு வெளியான ‘பத்து தல', ‘ஆகஸ்ட் 16, 1947' ஆகிய படங்களில் அவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். தற்போது ‘கிரிமினல்', ‘மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தினா ராகவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இதற்கு ராஜு முருகன் வசனம் எழுதுகிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “தென்சென்னைப் பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியல் தான் கதைக் களம். அதை அரசியல் நையாண்டி நகைச்சுவை கலந்து சொல்ல முயல்கிறேன்.

சென்னை தரமணி பகுதியில், அரசியல் கட்சி ஒன்றில் ஆர்வமாகச் செயல்படும் ‘ஏரியா பையன்’ கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் வருகிறார்” என்றார். இப்படத்தை எம்.ஜி.ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன், ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE