கடவுளின் பெயரால்... - த்ரிஷாவின் ‘பிருந்தா’ சீரிஸ் எப்படி?

By திரை பாரதி

வளரும் இடம் எவ்வளவு மோசமான சூழலைக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றியும் விடுதலையும் பெறும் மனிதர்கள் நம் மத்தியில் நிறைய பேர் உண்டு. ஆனால், ஒரே தாய்க்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் வளரும் சூழ்நிலை காரணமாக எந்த மாதிரியான மனிதர்களாக உருவெடுத்தார்கள், இளமையில் பிரிந்த அவர்கள் எப்படிப்பட்ட புள்ளியில் சந்தித்துக்கொண்டார்கள் என்பதை க்ரைம் த்ரில்லர் திரைமொழியில் விறுவிறுப்பாகப் பரிமாறியிருக்கிறது ‘பிருந்தா’ இணையத் தொடர்.

தெலுங்கில் உருவாகி, தமிழ் உள்படப் பல இந்திய மொழிகளில் சோனி லைவ் தளத்தில் கிடைக்கும் இத்தொடரின் நாயகி த்ரிஷா. மிகவும் முதிர்ச்சியான நடிப்பை, தனது முதல் இணையத் தொடருக்கு வழங்கியிருக்கிறார். ‘ஆழமாகவும் தீவிரமாகவும் சிந்திப்பவர்கள், குறிப்பாகக் கடவுள் மறுப்பின் மீது பிடிமானம் கொண்டவர்களாக வளர்ந்து வருபவர்கள்’ என்கிற விமர்சனம் புத்தாயிரத் தலைமுறையினருக்கு அதிகமும் பொருந்தக்கூடியது.

சூர்யா மனோஜ்

இந்தத் தொடரை எழுதி, இயக்கியிருக்கும் சூர்யா மனோஜ் வங்கலா, கடவுள், அவரின் பெயரால் உருவான மதங்கள், அவற்றின் வழிபாடுகள் உருவாக்கிய மிக மோசமான சடங்குகளில் நம்பிக்கைக் கொண்டிருக்கும் மூடத்தனத்தை, ‘முள்ளில் விழுந்த சேலையைக் கிழியாமல் எடுப்பதுபோல்’ மிகத் திறமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மதச் சடங்கு ஒன்றினால் சிறகொடிந்த எதிர்மறைக் கதாபாத்திரம், தன் சிறகின் காயத்தை குணப்படுத்திக்கொள்ள வாழ்க்கை இரண்டாம் வாய்ப்பை வழங்குகிறது. அவனோ, “அவங்க எல்லாரும் கடவுள் இல்லை என்கிற உண்மையை ஏத்துக்கணும்; அதுக்கு என் உயிரே போனாலும் சரி” என்று களமாடுகிறான். குடும்ப அமைப்பில் வளரும் நேர்மறைக் கதாபாத்திரமும் சிறகொடிந்த பறவைதான். தவிர, சிறகொடிந்த தருணங்களைக் கொடுங்கனவாகக் கொண்டிருப்பவள்.

“எது தவறு, எது சரின்னு தெரியாம இருக்கே அதுதான் இந்த உலகம். கடவுள் இருக்காருன்னும் தப்பு செய்யக் கூடாது, இல்லன்னும் தப்புச் செய்யக் கூடாது” என அன்பின், மனிதத்தின் அடையாளமாகி நிற்கிறாள்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களை இணைக்கும் குற்றப் பின்னணியை, நாம் இடைவேளை எடுத்துக்கொள்ள முடியாதபடி ஒரே மூச்சில் காண வைத்துவிடும் ஆவலைத் தக்கவைக்கிறது திரைக்கதை. திரை எழுத்து, நடிகர்கள் தேர்வு, அவர்களின் பங்களிப்பு, படமாக்கம், இசை என ஓர் அறிமுக இயக்குநர் தன் ஆக்கத் திறனை அர்ப்பணிப்புடன் கொட்டிருக்கும் அசத்தலான திரை அனுபவம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE