‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தனது மெட்டுப் பயணத்தைத் தொடங்கிய சந்தோஷ் நாராயணன், தரமான கதைப் படங்கள், கமர்ஷியல் படங்கள் என இரண்டு வகைமைக்கும் தரமான இசைப் பங்களிப்பினைச் செய்து வருகிறார். தமிழ்த் தனியிசையிலும் இவரது கை ஓங்கியே இருக்கிறது.
மண்ணின் இசையையும் இசைக் கலைஞர்களையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வது இவரது தனிச் சிறப்பு. சந்தோஷ் நாராயணனிடம் ‘லைவ்’ இசை நிகழ்ச்சியை நடத்த மாட்டீர்களா?’ என்று அவருடைய ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், தற்போது தனது ‘உலக இசை நிகழ்ச்சி’ பயணத்தைத் தொடங்கவிருக்கிறார். அப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை, நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நாளை (பிப்ரவரி 10) நடக்கிறது.
‘நீயே ஒளி - சவுண்ட்ஸ் ஆஃப் சவுத்’ என இந்நிகழ்ச்சிக்குத் தலைப்பு சூட்டியிருக்கிறார் சந்தோஷ். தனது இசையில் வெளியான வெற்றிப் பாடல்களையும் தனது முன்னோடி, சமகால சக இசையமைப்பாளர்களின் தேர்ந்தெடுத்த பாடல்களையும் தரவிருக்கிறார். அதே வேளை, நாட்டுப்புற இசைக் கருவிகள், கலைஞர்களுடன் இணைந்து தனது கிராமியம் மணக்கும் பாடல்கள், தனியிசைப் பாடல்களையும் இதில் இசைக்க இருப்பதால்தான் இப்படியொரு தலைப்பை நிகழ்ச்சிக்குச் சூட்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
ஏமாற்றாத ‘லவ்வர்’ - கோலிவுட்டில் புகழ்பெற்ற வரைகலை வடிவமைப்பாளராக இருப்பவர் யுவராஜ் கணேசன். இவர் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘ஜெய்பீம்’ மணிகண்டன் நாயகனாக நடித்த ‘குட்நைட்’ படத்தைத் தயாரித்தார். ரசிகர்கள் எதிர்பாராத வகையில் சிறந்த திரை அனுபவம் தந்த அந்தச் சிறிய பட்ஜெட் படம், பெரிய வசூல் வெற்றியை ஈட்டியது.
» சூட்கேஸ் என நினைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற திருடர்கள்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்
அந்தப் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடுவதில் கூட ஆர்வமில்லாமல், தங்களது இரண்டாவது படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டது யுவராஜ் கணேசன் - மணிகண்டன் கூட்டணி. அறிமுக இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் அந்தப் படம் ‘லவ்வர்’.
இதில் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரிணி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படம், காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது.
நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகி யோர் இணைந்து தயாரித்திருக் கிறார்கள். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் மணிகண்டன் பேசும்போது, “‘குட்நைட்’ போலவே இந்தப் படமும் ரசிகர்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.
நிஜப் புலிகளுடன் ஒரு படம்! - யுவன் ஷங்கர் ராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ஜே. சுரேஷ். அவர் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் ஸு கீப்பர்’. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் நாயகனாகவும் ஷிரின் காஞ்வாலா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வனவிலங்குக் காப்பகத்தில் ‘ஸு கீப்பர்’ வேலை செய்யும் ஒரு வெள்ளந்தி இளைஞன்,
தான் நேசிக்கும் ஒரு சிறுவனுக்காகப் பூனை என நினைத்து புலிக்குட்டி ஒன்றை வீட்டில் வளர்க்கத் தொடங்குகிறார். அந்தப் புலிக்குட்டியை வனத்துறையினர் ஒரு பக்கம் தேடுகிறார்கள். புலிக்குட்டியோ நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருகிறது.
இதில் ‘ஸு கீப்பர்’ எப்படிப் பாதிக்கப்படுகிறார். வளர்த்த புலி என்ன செய்தது என்பதைக் கதையாகக் கொண்டு படம் உருவாகியிருக்கிறது. ஜே4 ஸ்டுடியோஸ் சார்பில் ஜெபா ஜோன்ஸ் - எஸ். ராஜரத்தினம் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜரத்தினம் பேசும்போது, “படத்தில் நிஜப் புலிக்குட்டி, நிஜமான வளர்ந்த புலி ஆகியவற்றை வைத்து, பாங்காக், பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் ஷூட் செய்தோம். நீலகிரியிலும் படப்பிடிப்பு நடந்தது.
‘இன்று படப்பிடிப்பில் புலியால் குழுவினருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை’ என்று தயாரிப்பு நிர்வாகி இரவு வந்து சொன்ன பிறகே நிம்மதியாகத் தூங்கப் போவோம். திட்டமிட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு செலவு ஆகிவிட்டது. ஆனால், படம் சிறப்பாக வந்திருக்கிறது. பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்குமான படம்” என்றார்.