ஐம்பது நாள், நூறு நாள் ஓடிய அல்லது வலிந்து ஓட்டப்படும் படங்களுக்கு கோலிவுட்டில் விழா எடுப்பது வழக்கம்தான். ஆனால், இந்த விழா திரையுலகத்துக்கு முற்றிலும் புதியது! ஆஹா ஓடிடி தளத்தின் ஒரிஜினல் சீரீஸ் வரிசையில் கடந்த 10ஆம் தேதி வெளியாகியிருக்கிறது ‘வேற மாறி ஆபிஸ்’.
முதல் சீசனில் ஆறு எபிசோடுகளுடன் வெளியாகியிருக்கும் இத்தொடரைக் கடந்த 10 நாட்களில் 1.5 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் நடந்த விழாவில் தொடரில் நடித்துள்ள விஷ்ணு விஜய், ஆர்.ஜே. விஜய், விக்கல்ஸ் விக்ரம், ஷியாமா, லாவண்யா, வி.ஜே.பப்பு, சவுந்தர்யா நஞ்சுண்டன் ஆகியோருடன் இத்தொடரை இயக்கியிருக்கும் சிதம்பரம் மணிவண்ணன், தயாரித்துள்ள சிவகாந்த் உட்பட மொத்தக் குழுவினரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
தனியார் அலுவலகம் ஒன்றில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள்தான் கதை. முழு நீள நகைச்சுவைத் தொடராக வெளிவந்துள்ள இது, ஆஹாவில் கடந்த 6 மாதங்களில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘பேட்டைக்காளி’, ‘இரத்தசாட்சி’ ஆகிய சீரீஸ்களின் பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டிச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
சென்னைக்கு புதிய உலகப் படவிழா! - ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சென்னை சர்வதேசப் படவிழாவை, தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக ‘சென்னை உலக சினிமா விழா’ செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாள்களுக்கு நடக்கிறது! இப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களான உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் படவிழா குறித்து விளக்கினர்.
அப்போது: “இப்படவிழாவுக்கு விண்ணப்பித்திருந்த 300 படங்களிலிருந்து 15 படங்கள் நடுவர் குழுவால் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில சிறார் சினிமாக்களும் உண்டு. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜன் நினைவைப் போற்றும் வகையில் ‘அடவி’ என்கிற மௌனத் திரைப்படம் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் ‘ஃபெஸ்டிவல் வெர்ஷன்’ படங்கள், சிறார் படங்கள் என பல பிரிவுகளில் திரையிடுகிறோம்.
கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘பராசக்தி’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்பட விழாவில் திரையிடல் தேர்வுக்குப் படங்களைப் பரிசீலிக்க படைப்பாளிகளிடம் விண்ணப்பக் கட்டணம் வாங்கப்படவில்லை. அதேபோல் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது.
விழாவின் முத்தாய்ப்பாக சிறார் உலக சினிமாக்களைத் திரையிடும்போது சிறுவர்கள் மட்டுமே அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள். திரைப்பட ரசனை குறித்தப் பயிற்சிப் பட்டறையை முன்னணித் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து நடத்த இருக்கிறார்கள். சென்னை வடபழனியில் உள்ள தேவி கருமாரி திரையரங்கில் படவிழா நடக்க இருக்கிறது.
‘கண்ணப்ப’ராக விஷ்ணு மஞ்சு! - சரித்திர, புராணப் படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ள தருணம் இது. அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் விஷ்ணு மஞ்சு. தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகனான இவர், டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர், சைவ சமயத்தவர்களால் போற்றி வணங்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ‘டைட்டில்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகியாக நுபுர் சனோன் நடிக்க, பான் இந்தியப் படமாக உருவாகும் இதன் தமிழ்ப் பதிப்புக்கு ‘கண்ணப்பா - ஓர் உண்மையான இந்தியக் காவியக் கதை’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள். ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி - ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் மோகன் பாபு படத்தைத் தயாரிக்கிறார்.