திரையிசை குறித்துப் பல புத்தகங்கள் வந்திருக் கின்றன. இந்தப் புத்தகம் இதுவரை யாரும் தொடாத, முற்றிலும் ஒரு புதிய களத்தைக் கையாண்டு வெற்றி கண்டிருக்கிறது. படம் வெளிவரும் முன்பே, அப்படத்தில் இடம்பெற்ற தணிக்கை செய்யப்படாத பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு பெற்றவர்களிடமிருந்தும் படத்தின் இயக்குநர், தயாரிப் பாளர் ஆகியோரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டினால்தான் இப்படியொரு நூலை எழுத முடியும். தணிக்கைக்குப் பிறகு வரிகளில், வார்த்தைகளில் மாற்றம் பெற்று வெளியான 50 தமிழ்த் திரையிசைப் பாடல்கள் தணிக்கையின் கத்தரியில் சிக்கி எப்படி வார்த்தைகளை மாற்றிக்கொண்டன என்கிற சுவையான வரலாற்றைத் தேடித் தேடித் தொகுத்திருக்கிறார் அலோபதி மருத்துவரான டாக்டர் எம்.கே.ஆர்.சாந்தாராம்.
அவரது பெயரிலேயே தேசப் புகழ்பெற்ற திரையுலக முன்னோடி இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொரு கட்டுரையிலும் முழுமையும் ரசனையும் வழிந்தோடுகிறது.
தணிக்கையில் சிக்கிய பாடல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்தும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் ஹீரோயிசக் கதைகளில் நடித்துத் தீர்த்த 60 மற்றும் 70களில் வெளியான படங்களில் இடம்பெற்றவை.