கோலிவுட் ஜங்ஷன்: தமிழுக்கு வரும் ஆர்ஷா!

By செய்திப்பிரிவு

கடந்த நவம்பரில் டப் செய்யப்படாமல் தமிழ்நாட்டிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், வினீத் சீனிவாசன், சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோருடன் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆர்ஷா சாந்தினி பைஜு.

இவர் ‘முகை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கதாநாயகியை மையப்படுத்திய கதை. லைட் ஹவுஸ் மீடியா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கியிருக்கிறார். “மலரின் முன் பருவத்தைக் குறிக்கும் சொல்தான் ‘முகை’. ஆர்ஷா சாந்தினி நடித்த ஒரு யூடியூப் வீடியோவைப் பார்த்து அவரைத் தேர்வு செய்தேன்.

இது ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை. ஆர்ஷாவுக்குத் தமிழில் அறிமுகமே அமர்க்களமாக இருக்கும். ‘ஆடுகளம்’ கிஷோரின் திரைப் பயணத்தில் இது மிக முக்கியமான படம். யார், யாரை நடிப்பில் முந்துவது என்கிற ரீதியில் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள்.” என்கிறார் இயக்குநர் அஜித்.

த்ரில்லரைத் துறந்த இயக்குநர்! - அருள்நிதி நாயகனாக நடித்த ‘தேஜாவு’ படத்தின் கதை சொல்லலுக்காகப் பேசப்பட்டவர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அவர் இயக்கும் இரண்டாவது படம் ‘தருணம்’. அறிமுகப் படத்தை மிஸ்ட்ரி த்ரில்லராகக் கொடுத்த இயக்குநர், தற்போது “காதலின் எதிர்பாராத தருணங்களைப் படமாக்குகிறேன்” என்கிறார். படம் குறித்து மேலும் கூறும்போது “இப்படத்தின் தயாரிப்பாளர் புகழ் எனக்கு 18 வருட நண்பர். என்னையும் கதையையும் நம்பி முதலீடு செய்கிறார். கிஷன், ஸ்மிருதி வெங்கட் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.

இளமை துள்ளும் ஜோடி. நல்ல கதைக்கு மட்டுமே இசையமைக்கும் தர்புகா சிவா நான்கு ஹிட் பாடல்கள் தர ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘தேஜாவு’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு த்ரில்லர் பண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தக் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக்கொண்டேன். தற்காலத் தலைமுறையினர் காதலை எவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பதை இப்படம் பேசும்” என்றார்.

3 நாள் கொரியப் படவிழா! - தயாரிப்புச் செலவைப் போல் 300 மடங்கு வசூல் ஈட்டிய தென்கொரியத் திரைப்படம் கரோனாவுக்கு முன்னர் வெளியான ‘பாராசைட்’. 92ஆவது ஆஸ்கரில் 3 விருதுகளை அள்ளியது. தற்போது தமிழ், மலையாள சினிமாக்களில் தென்கொரியப் படங்கள் அதிகாரபூர்வமாக மறு ஆக்கம் செய்யப்படுவதும் தொடங்கியிருக்கிறது. அந்த அளவுக்குத் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன தென்கொரியப் படங்கள்.

இந்நிலையில், கலாச்சார ரீதியான பொருத்தப்பாட்டுடன் விளங்கும் 4 கொரிய உலக சினிமாக்களை, இன்று தொடங்கி (ஜூன் 9 முதல் 11 வரை) மூன்று நாட்களுக்கு சென்னையில் உள்ள தாகூர் திரைப்பட மையத் திரையரங்கில் திரையிடுகிறது இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம். 2023ஆம் ஆண்டுக்கான கொரியத் திரைப்பட விழாவான இதனை, சென்னையில் உள்ள தென்கொரியத் தூதரகம் ஒருங்கிணைத்துள்ளது. இயக்குநர் வசந்த் சாய், நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு படவிழாவைத் தொடங்கி வைக்கிறார்கள். ஆர்ஷா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE