மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல மொழி. விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தத்தமது மொழியில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவே செய்கின்றன. மனித மொழியில்தான் நெகிழ்வுத்தன்மை இருக்கிறது. ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு கண்ணோட்டத்தில் விரிவாகப் பேசுவதற்கான சொற்கள், இலக்கணம், இலக்கியங்கள், கலைச்சொற்கள் என மனித மொழிகள் பல்லாயிரம் மடங்கு மேம்பட்டவை. உண்மையில், ஹோமோ சேப்பியன்ஸ் மனித இனமான நாம் அனைவரும், மொழியை வைத்துத்தான் இந்த உலகில் தப்பிப் பிழைத்திருக்கிறோம் என்கிறார் இஸ்ரேலிய வரலாற்றறிஞர் யுவால் நோவா ஹராரி. நியான்டர்தால், ஹோமோ ஃபுளோரெசியென்சிஸ் போன்ற சக மனித இனங்கள் அழிந்துபட்ட அல்லது அழிக்கப்பட்ட பின்னரும் ஹோமோ சேப்பியன்ஸ் பிழைத்திருக்க மொழி ஒரு முக்கியமான கருவியாக இருந்ததைத் தனது ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ (Sapiens: A Brief History of Humankind) நூலில் சுவாரசியத்துடன் பதிவுசெய்திருக்கிறார் ஹராரி.
நடைமுறையில் சாத்தியமில்லாத கற்பனை வளத்தைச் சாத்தியப்படுத்த மனிதர்களுக்குத் துணைபுரிந்தது வம்புப் பேச்சுதான் என்பது ஹராரியின் வாதம். அறிவுப் புரட்சியைத் தொடர்ந்து வம்புப் பேச்சின் மூலம் தங்கள் இனக்குழுவைச் சேர்ந்த பிற மனிதர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி விவாதித்தனர் நம் மூதாதையர். அதன் மூலம் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதும், கடும் போட்டிகளுக்கு இடையில் அதிகாரத்தைப் பெறுவதும் இன்ன பிற அனுகூலங்களும் அவர்களுக்குச் சாத்தியமாகின. இன்றைக்கும் விஜய் - அஜித் தொடங்கி, ராஜா - ரஹ்மான், சாரு - ஜெயமோகன் வரை ரசிகப் படைகளின் வம்புப் பேச்சுக்கள் மூலம் இணையத் தமிழ் வளர்ச்சியடைந்ததை உதாரணமாகச் சொல்லலாம். இந்த மனிதர்கள் இருக்கிறார்களே…
- வெ.சந்திரமோகன்