சிலி நாட்டின் தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்திருக்கிறது ஈஸ்டர் தீவு. இந்தத் தீவில் உள்ள ‘மோவாய்’ சிலைகள் உலகப் புகழ்பெற்றவை. தற்போது இந்தத் தீவுக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்திருக்கிறது. அது, உலகிலேயே சுத்தமான தேன் இங்குதான் கிடைக்கிறது!
உலகின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயத்துக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் தேனீக்கள் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. சில இடங்களில் தேனீக்கள் அழிந்து போகும் நிலைக்குச் சென்றுவிட்டன.
» டிங்குவிடம் கேளுங்கள்: வால் விண்மீன் வந்தால் ஆபத்தா?
» விடை தேடும் அறிவியல் 04: உயிர்களைக் கட்டுப்படுத்துகிறதா நிலா?
ஈஸ்டர் தீவின் தேனீக்கள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, அவை அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. தீவின் இனிமையான காலநிலை காரணமாக, தேனீக்கள் ஆண்டு முழுவதும் பூக்களை நாடிச் சென்றுகொண்டிருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் தேனீ வளர்ப்பாளர்கள் ஒரு காலனியிலிருந்து ஆண்டுக்கு 20 கிலோ தேனை எடுக்கிறார்கள் என்றால், ஈஸ்டர் தீவில் ஆண்டுக்கு 90 முதல் 120 கிலோ தேன் வரை எடுக்கிறார்கள்!
ஈஸ்டர் தீவு தேனீக்களை நோய்கள் தாக்குவதில்லை என்பதால், தேனீ வளர்ப்பவர்களுக்கு எந்த வகையான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அதனால்தான் ஈஸ்டர் தீவு தேனை ‘அமிர்தம்’ என்று அழைக்கிறார்கள்.