வானவில்லை
வானவில்லை
வளைத்து வைத்தது யாரு?
பருத்தியை
வெடித்துதான்
சிரிக்க வைத்தது யாரு?
கொடியில்
கோவைப்பழத்துக்குள்
நெருப்பை வைத்தது யாரு?
பச்சைக் கிளி
மூக்கை மட்டும்
சிவக்க வைத்தது யாரு?
மாதுளையில்
முத்துகளை
முடிந்து வைத்தது யாரு?
முருங்கையிடம்
மேளக் குச்சி
கொடுத்து வைத்தது யாரு?
தவளைகளை
கூடிப் பாடம்
படிக்கச் சொன்னது யாரு?
மக்காளச் சோள
தோகைக்குள் மஞ்சள்
பற்களை வைத்தது யார்?
இயற்கையை
நீயும் இப்படிப்
பார்த்துப் பட்டியல் போடு!