விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை பயிற்சி: தாட்கோ அறிவிப்பு

By ராகா

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதி திராவிடர், பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை துறையில் பணிபுரிவதற்கான பயிற்சி வழங்குவது குறித்த அறிவிப்பை தாட்கோ வெளியிட்டுள்ளது.

ரூ. 20,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சிக் கட்டணத்தை தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கிறது. இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்குத் தங்கும் இடமும் உணவும் இலவசம். மூன்று மாதங்கள் நடைபெறும் இப்பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு ‘AASSC’ (AEROSPACE AND AVIATION SKILL SECTOR COUNCIL) அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.

தகுதி: இளங்கலையில் ஏதாவதொரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரைப் பயிற்சிக்குத் தேர்வு செய்யும் முன் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பயிற்சி விவரம்: 500 பேருக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகப் பணிபுரிவது தொடர்பான வகுப்புகள் எடுக்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவருக்குச் சான்றிதழும், மாதந்தோறும் ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://iei.tahdco.com/aviation_reg.php) விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: http://tahdco.com/admin/Popup/Aviation_Poster.jpg

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE