தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், யூடியூப் என பல தளங்களில் இயங்கி வருபவர் லிப்ரா புரொடெக் ஷன் ரவீந்தர் சந்திரசேகரன். சின்னத்திரை நடிகர் மகாலட்சுமியுடனான இவரது திருமணம் கடந்த ஆண்டு நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளானது. அதையெல்லாம் கடந்து தற்போது தனது தயாரிப்புப் பணிகளில் பிஸியாகியிருக்கிறார். இவரது தயாரிப்பில், மஹத் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’. சமீபத்தில் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆர்.அரவிந்த் எழுதி இயக்கியிருக்கிறார். “திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து நாயகியிடம் தன் காதலைத் தெரிவிக்கிறார் நாயகன். இதை எதிர்பார்த்த நாயகி, அதை ஏற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவற்றை நாயகன் எப்படி எதிர்கொண்டார் என்பதை யதார்த்த நகைச்சுவை மூலம் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
மாஸ் ஹீரோக்களின் கூட்டணி! - ‘கே.ஜி.எஃப்’ பட நாயகன் யஷ் தொடங்கி, புத்தாயிரத்தின் கன்னட சினிமாவில் பிரபலமான புதிய மாஸ் ஹீரோக்களின் எண்ணிக்கைக் குறைவுதான். அதற்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக மாஸ் ஹீரோக்களாக இருந்து வருபவர்களுக்கு அங்கே எப்போதுமே வரவேற்பு இருக்கிறது.
» சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு பரிந்துரை
அந்தப் பட்டியலில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் உபேந்திரா, கிச்சா சுதீப் இருவரும் ‘கப்ஜா’ என்கிற பான் இந்தியா படத்தில் இணைந்திருக்கிறார்கள். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளுடன் மராத்தி, ஒடியாவிலும் ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்கள். 1942இல் நடக்கும் கேங்ஸ்டர் ஆக் ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
ஸ்ரீசித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் சார்பில் ஆர். சந்திரசேகர் பெரும் பொருள்செலவில் தயாரிக்க, ஆர்.சந்துரு இயக்கியிருக்கிறார். ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர் ஆகிய மூன்று பேர் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே வெளியாகிவிட்ட இப்படத்தின் டீசரை இதுவரை 3 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17இல் படத்தை வெளியிடுகிறார்கள்.
கோபி - சுதாகரின் முதல் படம்! - யூடியூபில் இயல்பாகச் சிரிக்க வைக்கும் ‘பரிதாபங்கள்’ புகழ், கோபி - சுதாகர் இருவரும் ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் திரட்டிய நிதியைக் கொண்டு ஃபேண்டஸி கலந்த முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.
இதற்காக பரிதாபங்கள் புரொடக் ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, கோபி - சுதாகர் முதன்மைக் காபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் பற்றி கோபி - சுதாகர் கூறும்போது: “இது இரண்டு சாமானிய இளைஞர்களைப் பற்றிய படம். கதையைக் கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள்தான் படத்திலும் இருக்கும்.
எங்களுடன் சேர்ந்து பார்வையாளர்களும் பயணிப்பார்கள். ’பரிதாபங்கள்’ காணொலிகளில் இருக்கும் கோபி - சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். எங்களது வாழ்க்கையில் குறுக்கிடும் கதாபாத்திரங்களை, விடிவி கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, மு. ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், திராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் ஏற்று நடிக்கின்றனர். சென்னையைச் சுற்றி 40 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்குகிறோம்” என்கிறார்கள்.
துப்பறிவாளனுக்குச் சிக்கல்! - “பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடி வருபவர்களுக்குச் சரியான தகவல்களைத் திரட்டி ரகசியமாகக் கொடுப்பதில் கில்லாடியான ஆள் கதையின் நாயகன். ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் தொழில்முறை டிடெக்டிவ் ஆகப் பணிபுரிகிறார். எதிர்பாராதவிதமாக ஒரு விபத்துக்குக் காரணமாகிவிடும் அவர், அதிலிருந்து வெளியே வர முயல்கிறார். அப்போது கடந்த காலத்தின் தொடர்ச்சி அவரை அதிலிருந்து மீள விடாமல் செய்கிறது.
தனது துப்பறியும் திறமையைக் கொண்டு, அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பதுதான் கதை” என்கிறார் ‘நியதி’ படத்தை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் நவீன். இவர், ‘மெரினா புரட்சி’, ‘வலியோர் சிலர்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். ஜீனியஸ் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தின் முதல் தோற்றத்தை, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு!
‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி 32 வருடங்களாக நடித்து வரும் விஜய்யும் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி 22 வருடங்களாக நடித்து வரும் த்ரிஷாவும் ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இவற்றில் இரண்டு படங்கள் தோல்வி அடைந்தபோதும் விஜய் - த்ரிஷா ஜோடிப் பொருத்தமும் ‘கெமிஸ்ட்ரி’யும் ரசிகர்களால் தொடர்ந்து சிலாகிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஆனால், இவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதை அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்னும் தலைப்புச் சூட்டப்படாத இந்தப் படத்தின் நடிகர்கள் பட்டியலில் மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் என பலர் இணைந்திருக்கிறார்கள்.