காட்டில் மாமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் காய்களும் கனிகளும் நிறைந்து இருந்தன. அதனால் அந்த மரத்தை நாடி பலவிதமான பறவைகள் வந்தன. மகிழ்ச்சியாகப் பசியாறின. ஓய்வெடுத்தன.
ஒரு நாள் மேகம் திரண்டு, இடி மின்னலோடு மழை கொட்டியது. பயங்கரமான மின்னல் ஒன்று அந்த மரத்தைத் தாக்கியது. மரத்திலிருந்த இலைகளும் காய்களும் கனிகளும் கருகின. மரமே காய்ந்த கட்டை போல் நின்றது.
இனி இந்த மரம் பயன்படாது என்று நினைத்த பறவைகள் எல்லாம் வேறு மரத்தைத் தேடிச் சென்றுவிட்டன. மினி என்ற ஒரு கிளி மட்டும் அந்த மரத்தை நினைத்து கவலைப்பட்டது. தன்னுடைய இருப்பிடத்தை அது மாற்றிக்கொள்ள மறுத்தது. உணவு தேடி எங்கே சென்றாலும் ஓய்வுக்கு அந்தக் காய்ந்துபோன மாமரத்துக்கு வந்தது.
"மினி, உன் பாசம் புரியுது. அதுக்காக அந்த மாமரத்திலேயே குடி இருப்பீயா? காட்டில் வேறு மரங்களா இல்லை?” என்று சக பறவைகள் கேட்டன.
"நண்பர்களே, நாம் எவ்வளவோ காலம் இந்த மரத்தில் விளைந்த கனிகளைச் சாப்பிட்டும் கிளைகளில் தங்கியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இன்று மரம் பயன் இல்லாமல் போய்விட்டது என்பதற்காக அதை விட்டுவிட்டுச் செல்ல என்னால் முடியவில்லை. எனக்கு என்னவோ இந்த மரம் மீண்டும் துளிர்க்கும் என்று தோன்றுகிறது. என் நம்பிக்கையைப் பார்த்து மரமும் நம்பிக்கையோடு இருந்தால், மீண்டும் துளிர்க்கும் சாத்தியம் இருக்கிறதல்லவா?”
“ஒரு கிளி மாதிரியா பேசுறே? எங்காவது மின்னல் தாக்கிய மரம் துளிர்க்குமா?”
“உங்களை நான் இந்த மரத்தில் குடியிருக்கச் சொல்லவில்லையே... உங்கள் அக்கறைக்கு நன்றி” என்று சொல்லிவிட்டு, இரை தேடிப் பறந்தது மினி.
நாள்கள் நகர்ந்தன. அந்த மரம் மீண்டும் துளிர்ப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. கிளி மிகவும் வருத்தத்துடன் இருந்தது.
அன்று காய்ந்த மாமரத்தை வெட்டுவதற்காக சாமியப்பன் வந்தார். அவரைக் கண்டவுடன் கிளிக்குப் பயம் தொற்றிக்கொண்டது.
“கிளியே, நீ வேறு மரங்களில் சென்று தங்கிக்கொள். இந்தக் காய்ந்த மரத்தை நான் வெட்டப் போகிறேன்” என்றார் சாமியப்பன்.
“இது காய்ந்த மரம் அல்ல. விரைவில் துளிர்க்கப் போகும் மரம். இதை வெட்டிவிடாதீர்கள். உங்களுக்கு வேறு மரங்களா இல்லை?” என்று கேட்டது மினி.
“உன் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். இந்த மரம் துளிர்க்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லட்டுமா?” என்று கேட்டார் சாமியப்பன்.
வேறு வழியின்றி மினி சம்மதித்தது.
மரத்தைப் பரிசோதித்தார் சாமியப்பன். காய்ந்த கிளைகளை வெட்டினார். துளிர்க்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மினிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
சாமியப்பன் நடுவில் இருந்த ஒரு பெரிய கிளையை லேசாக வெட்டினார். மரத்தில் ஈரம் இருந்தது.
“அடடா! கிளியே, உன் நம்பிக்கை வீண் போகவில்லை. இந்த மரம் விரைவில் துளிர்க்கப் போகிறது. மின்னல் மேல் மரத்தை மட்டுமே தாக்கியிருக்கிறது. அதனால் ஏற்பட்ட பாதிப்பால்தான், மரம் மீண்டும் துளிர்க்க இவ்வளவு காலமாகியிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த மரத்திலிருந்து இலைகள் வரும். பிறகு கிளைகள் உருவாகும். அதனால் இந்த மரத்திலேயே நீ தங்கிக்கொள்ளலாம்” என்றார் சாமியப்பன்.
கிளியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “நிஜமாகவே இன்னும் ஒரு வாரத்துல மரம் துளிர்த்துடுமா?” என்று ஆவலாகக் கேட்டது கிளி.
"காய்ந்த மரத்தின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த உன் எண்ணம் உயர்வானது. அந்த நல்ல எண்ணமே இந்த மரத்தைத் துளிர்க்க வைத்திருக்கிறது. சில மாதங்களில் பழைய மரம் போன்று மீண்டும் வளர்ந்துவிடும். உன் உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் இந்த மரத்தை நாடி வருவார்கள். நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சாமியப்பன்.
ஒரு சில நாள்களிலேயே அந்த மாமரம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. சில மாதங்களில் கிளைகளும் உருவாகி, அடர்த்தியான மரமாக மாறிவிட்டது. மினியின் உறவினர்களும் நண்பர்களும் மாமரத்தில் மீண்டும் குடியேறினர். மினியின் நம்பிக்கையைப் பாராட்டின! மாமரமும் மினிக்கு நன்றி சொல்லும் விதத்தில் நிறைய பழங்களை அளித்தது.