நெட் தகுதித் தேர்வுக்குத் தயாரா? - இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்!

By ராகா

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. கரோனாவால் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை கணினி வழித் தேர்வாக நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

நெட் தகுதித் தேர்வின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://ugcnet.nta.nic.in/இல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளலாம்.

இணையவழி விண்ணப்பப்பதிவின்போது விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, தேவையான ஆவணங்கள், ஒளிப்படம், கையொப்பம் ஆகியவற்றைப் பதிவு செய்து இறுதியில் கட்டணம் செலுத்தி வெளியேறவும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1100 விண்ணப்பக் கட்டணமும், இடபிள்யூஎஸ், ஓபிசி, என்சிஎல் பிரிவினர் ரூ. 500 கட்டணமும், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கை பிரிவினர் ரூ. 275 கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஒரே நாளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில் முதல் கட்டத் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாவது கட்டத் தேர்வு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெற உள்ளன. இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் வெற்றிபெற குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: ugcnet.nta.nic.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE