* பப்பரப்புளிய மரம், பெருக்க மரம் என்று அழைக்கப்படும் Baobab அரிய வகை மரங்களில் ஒன்று.
* மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட 9 வகையான பாவோபாப் இனங்கள் உள்ளன.
* இலங்கையிலும் இந்தியாவிலும் வெகு சில இடங்களில் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
* வறண்ட பகுதிகளில் வளரும்.
* நடுமரம் 23 முதல் 36 அடி விட்டம் கொண்டது. 16 முதல் 98 அடி உயரம் வரை வளரும்.
* ஜிம்பாப்வேயில் ஒரு மரத்தைக் குடைந்து, 40 மனிதர்கள் அதில் வசித்திருக்கிறார்கள் என்றால் மரத்தின் அளவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
* சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறப்பட்டைகளைக் கொண்டது.
* மரத்தின் உச்சியில் குறுகிய கிளைகள் காணப்படும். ஓர் ஆண்டில் குறிப்பிட்ட காலம் வரையே இலைகள் காணப்படும்.
* இலைகள் இல்லாத குறுகிய கிளைகள் கொண்ட மரத்தைப் பார்க்கும்போது, தலைகீழாக நட்டுவைத்த செடிபோல் தோற்றம் தரும்.
* பெரிய வெள்ளைப் பூக்கள் இரவில் பூக்கும். பூக்களின் நறுமணத்தை நாடி வெளவால்களும் பூச்சிகளும் படையெடுத்து வருகின்றன.
* காய் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பழமாக மாறும். பெரிய இளநீர் அளவுக்குப் பெரிதாக இருக்கும். தடித்த ஓட்டின் மீது பச்சை முடிகள் படர்ந்திருக்கும். கோகோ விதை போலப் பழத்துக்குள் ஏராளமான விதைகள் இருக்கும். ஒன்றரை கிலோ எடை கொண்டது. இந்தப் பழத்தில் வைட்டமின்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் சத்துகள் அதிகம் இருக்கும்.
* பழத்துக்குள் சிறுநீரக வடிவில் கறுப்பு விதைகள் காணப்படும். இவற்றை வறுத்து, பொடி செய்து காபி போலவும் குடிக்கிறார்கள்.
* இந்த மரம் சுமார் 1 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கும்.
* வறட்சிக் காலத்தில் மனிதர்களும் விலங்குகளும் இந்த மரத்திலிருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
* மரத்தின் பட்டைகளிலிருந்து கயிறு, மிதியடி, கூடை, காகிதம், துணி, இசைக்கருவிகள், தண்ணீர் புகாத தொப்பிகளையும் செய்கிறார்கள்.