கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவிக்கரம்

By செய்திப்பிரிவு

கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் உதவிக்கரம் நீட்டிவருகிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யா ராவ். இவர்களுக்கு உதவுவதற்காக கிரவுட் ஃபண்டிங் தளமான Milaap மூலம் நிதிதிரட்டிவருகிறார்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வீடற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிப் பெண்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை உருவாக்குவதற்காகவும் இவர் நிதிதிரட்டிவருகிறார். தமிழகத்தில் 2016இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கிடைத்துள்ளது.

இந்தப் பெண்கள் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வந்தவர்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள், வீடற்றவர்கள், வேறெங்கும் அடைக்கலம் தேட முடியாதவர்கள், நடக்க முடியாதவர்கள், பேச்சு - செவித்திறன் குறைபாடு கொண்டவர்கள், பார்வைக் குறைபாடு கொண்டவர்கள், தீக்காயமடைந்தோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வேறு குறைபாடுகள் கொண்டவர்கள் எனப் பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மருத்துவர் ஐஸ்வர்யா அடைக்கலம் தந்து உதவுகிறார்.

ஐஸ்வர்யாவும் சிறப்புத் திறன் கொண்டவர்தான். அவர் கூறுகையில், “சிக்கலான பின்னணியில் இருந்து வரும் பெண்களும் சிறப்புத் திறன் கொண்டவர்களும் மற்ற பெண்களைப் போன்றவர்கள்தாம். தாங்களும் சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கல்வி, வேலை அல்லது தங்களுக்கான குடும்பத்தைத் தொடங்குவது போன்றவற்றை அவர்களும் விரும்புகிறார்கள். நாங்கள் அவற்றை வழங்க முயல்கிறோம். மேலும், எங்கள் தங்குமிடத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமானதாக மாற்ற விரும்புகிறோம்.

அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்க அவர்களுக்கு நேரம் கொடுக்கிறோம். அவர்கள் அதிகமாகப் படிக்க விரும்பலாம். ஏதாவது ஒரு திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கலாம். சம்பாதிக்க நினைக்கலாம். ஏதாவது விளையாட்டைக் கற்றுக்கொண்டு போட்டியிட விரும்பலாம். அவர்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவுவதே எங்களுடைய தங்குமிடத்தின் குறிக்கோள்.

இந்தியாவின் மிகப்பெரிய கிரவுட் ஃபண்டிங் தளமான Milaap.org இந்தத் தேவைக்காக ரூ. 80 லட்சம் நிதி திரட்டியுள்ளது. இந்தப் பெண்களை ஊக்குவிக்கவும் அவர்களுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் உலகம் முழுவதிலுமிருந்து நிதி குவிந்துள்ளது. வழுக்காத தளங்களைக் கொண்ட புதிய தங்குமிடம், பெண்கள் சிரமமின்றி ஏறி இறங்கும் வகையில் நகரும் படிக்கட்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பத்து கழிப்பறைகள் கட்டுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE