நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீபுக்கு ஆளும் கட்சி உதவுவதாக நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்ட நடிகை மனு அளித்திருந்தார். அது வரும் 31-ம் தேதி நடக்கவுல்ள திருக்காக்கர இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தலைவரும் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விடி.சதீஸன், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்த வழக்கில் இடைத்தரகர்கள் போல் செயல்பட்டுள்ளனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களது பெயர்கள் விரைவில் அம்பலப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைக் கடுமையாக எதிர்த்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. இடைத்தேர்தல் நடக்கவுள்ள இந்தக் காலத்தில் நடிகை இந்தக் குற்றச்சாட்டை முன்வைதிருப்பதன் பின்னால் அரசியல் கட்சி இருப்பதாக அமைச்சர்கள் இ.பி.ஜெயராஜ், ஆண்டனி ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து இது விஷயம் பெரும் விவாதம் ஆகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், “நடிகை சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்கட்டும். இடைத்தேர்தல் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமானது. அரசும் கட்சியும் எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகை பக்கம்தான்” எனக் கூறியுள்ளார்.
நடிகை கேரள உயர்நீதி மன்றத்தில் நடிகை சமர்ப்பித்த மனுவில் அதில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஹனி வர்கீஸுக்கு எதிராகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஆளும் கட்சி வழக்கில் 8வது பிரதியான நடிகர் திலீபுக்கு உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் இந்த வழக்கில் உயர்நீதி மன்றம் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.