தமிழ்ப் புத்தாண்டு விருந்து: கறிவேப்பிலை வடை

By ப்ரதிமா

கொளுத்தும் கோடைக்கு நடுவில் நாம் இளைப்பாறக் கிடைத்த நாளாக இருக்கிறது சித்திரை மாதப் பிறப்பு. தமிழர்கள் பலரும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ விருந்து கமகமக்கும். சித்திரையில் திரும்பும் திசையெங்கும் மலர்கள் பூத்துக் குலங்க, அவற்றுள் ஒன்றான வேப்பம்பூவில் பச்சடி செய்வோரும் உண்டு. சித்திரை முதல் நாளைச் சிறப்பிக்கும் வகையில் கறிவேப்பிலை வடை செய்யக் கற்றுத்தருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. பாரம்பரிய உணவைக் காலத்துக்கு ஏற்ப புதிய முறையில் சமைப்பதில் வல்லவர் இவர்.

என்னென்ன தேவை?
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - ஒன்றை டீஸ்பூன்
இஞ்சி துருவியது - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
சேமியா - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பையும் கடலைப் பருப்பையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். ஊறியதும் தண்ணீர் வடித்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். இதில் சிறிதளவு சேமியாவைச் சேர்த்து, மாவைச் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வாழையிலையில் வைத்துத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெய்யில் சிவக்கப் பொரித்தெடுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE