இயற்கை, தாவரங்கள், பறவைகள், உயிரினங்கள், வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றை நோக்குவது இன்றைக்குப் பயனுள்ள பொழுதுபோக்காகவும் அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் வகையிலும் மாறிவருகிறது. தமிழகத்திலும் பறவை நோக்குவோர், தாவரங்களைப் பதிவு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களை எழுதவும் பதிவு செய்யவும் உற்சாகப்படுத்தும் வகையில் உலக இயற்கைக் குறிப்பேட்டு வார விழா 2021 கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்துக் காட்டுயிர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ப.ஜெகநாதன் பகிர்ந்துகொண்டது:
’’இந்த விழாவின் ஒரு பகுதியாக இயற்கையின் ஏதாவது ஒரு அம்சத்தைப் பட்டியலிடலாம். படம் வரையலாம், எங்கே பார்த்தோம், என்ன பார்த்தோம், எத்தனை பார்த்தோம் என்பன போன்ற விவரங்களைக் குறிப்பெடுக்கலாம். குறிப்பெடுக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் வகையிலேயே, உலக இயற்கைக் குறிப்பேட்டு வார விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வில் யார் வேண்டுமானாலும் பங்கெடுக்கலாம். இப்படிப் பதிவு செய்வதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளலாம். உங்களது குறிப்பேட்டின் பக்கங்களை #naturejournalingweek.org ஹேஷ்டேக் கொண்டு Instagram, Facebook, Twitterஇல் பகிர்ந்துகொள்ளலாம். International Nature Journaling Week Facebook Groupஇல் இணைந்து கொள்ளலாம். Instagramல் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள https://www.instagram.com/green_scraps/ யையும் தொடரலாம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயல்பாடு!
ஜூன் 1 – எழுதுங்கள் - இயற்கை சார்ந்து பார்ப்பதைப் பற்றி சிறிய குறிப்போ, கவிதையோ, கட்டுரையோ எழுதலாம்.
ஜூன் 2 – படம் வரையுங்கள் - இயற்கை சார்ந்து காணும் உயிரினங்களை ஓவியமாக, கோட்டோவியமாக வரையலாம். உங்கள் இடத்தின் நில வரைபடத்தைக்கூட வரையலாம். அழகாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
ஜூன் 3 – இயற்கையில் எண்களைப் பாருங்கள் - பூவில் எத்தனை இதழ்கள் உள்ளன? வீட்டின் அருகில் உள்ள மரங்கள் எத்தனை? கூட்டமாகப் பறக்கும் பறவைகள் எத்தனை என எண்ணுங்கள். தோராயமாக இருந்தாலும் பரவாயில்லை.
ஜூன் 4 – உற்றுநோக்குங்கள் - இயற்கையின் ஏதோ ஒரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பொறுமையாக உற்று கவனியுங்கள். அதைப் பற்றி எழுத்திலோ, படமாகவோ விரிவாகப் பதிவு செய்யுங்கள்.
ஜூன் 5 – அறிய ஆவல் கொள்ளுங்கள் - இயற்கையின் பல அம்சங்கள் நமக்குப் புரியாத புதிராக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களைத் தந்து இயற்கை நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இன்று பார்த்த / இயற்கை குறித்த நெடுநாட்களாக இருக்கும் சந்தேகத்தை (எடுத்துக்காட்டாக, சில பறவைகள் ஏன் ‘V’ வடிவில் பறக்கின்றன?) தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு நூல்களில் தேடலாம், நண்பர்களிடம் பேசலாம், துறைசார் வல்லுநர்களிடமும் கேட்கலாம்.
ஜூன் 6 – நினைவுகளை விசாலப்படுத்துங்கள்! - உங்கள் குறிப்பேட்டின் பழைய பக்கங்களைத் திருப்பிப் பார்த்து, அந்த அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். எடுத்துக்காட்டாக, மேகக்கூட்டங்களைப் பார்த்து அவற்றின் வடிவங்களை உயிரினங்களாகக் கற்பனை செய்து பாருங்கள், இறக்கைகள் இல்லாமலேயே வௌவால்கள் எப்படிப் பறக்கின்றன என்பதை அறிய முற்படுங்கள்.
ஜூன் 7 – உங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள் - இதுவரை இயற்கைக் குறிப்பேட்டில் பதிவு செய்தவற்றை நமக்கு நாமே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தச் செயல்பாட்டை எப்படி மேம்படுத்த முடியும் என்பதைப் பற்றி யோசிக்கலாம். எடுத்துக்காட்டாக, படம் வரைவதோ எழுதுவதோ சரியாக வரவில்லை எனில், அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள முயல்வோம்’’.
மேலும் தகவல்களுக்கு: https://www.naturejournalingweek.com/
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டுக்குள் முடங்கியுள்ள இந்தக் காலத்தில் இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு. நம் வீட்டுத் தோட்டம், மொட்டை மாடி, வீட்டிலிருந்து பார்வை எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மேற்கண்ட அம்சங்களைப் பார்த்துப் பதிவு செய்யலாம்.