ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் புதிய முறை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் இணையதளத்தில் பார்க்கும் வசதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு முடிவு வெளியீடு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த போட்டித் தேர்வு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் எழுதினர்.

இந்த நிலையில், தேர்வு முடிவு திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அந்த பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

வழக்கமாக ஒரு தேர்வு முடிவு வெளியிடப்படும்போது தேர்வர்களின் மதிப்பெ ண்ணை அவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, யார் வேண்டுமானாலும் யாருடைய மதிப்பெண்ணையும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்டன.

வரலாற்றில் முதல்முறை

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இதுவரை பலமுறை போட்டித் தேர்வுகளை நடத்தி இருக்கிறது.

ஆனால், யாரும் யாருடைய மதிப்பெண்ணையும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரின் மதிப்பெண் விவரங்களையும் வெளிப்படையாக இணை யதளத்தில் வெளியிடுவது ஆசிரியர் தேர்வு வாரிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் அனைவரின் மதிப்பெண் விவரங்களை, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக அறிந்துகொள்ள முடிவதால், தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்பதை ஓரளவுக்கு தாங்களே யூகித்துக்கொள்ள முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE