சாட்ஜிபிடியுடன் பல தலைப்புகளில் கேள்வி கேட்டு அரட்டையடிக்கும்போது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் நாளைக்கு நம்மைப் போன்ற மனிதர்களுடைய வேலைகளையெல்லாம் பறித்துக் கொண்டுவிடும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?
வரலாற்றில் எந்தப் புதுத் தொழில்நுட்பம் அறிமுகமாகும்போதும் முந்தைய தலைமுறைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி வந்தவர்களுக்கு சிறு நடுக்கம் உண்டாவது இயல்புதான். ஒருவேளை, தங்களால் இந்தப் புதிய திறமையைப் புரிந்துகொள்ள முடியாதோ, தங்களுடைய பழைய திறமை இனி தேவையற்றவையாகக் கருதப்படுமோ, புதியவர்கள் தங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்களோ என்கிற கவலைகளெல்லாம் அவர்களுக்குள் ஏற்படும்.
அந்தக் கவலைகளையே எரிபொருளாகப் பயன்படுத்திக் கொண்டு கற்றுக் கொள்வார்கள், முன்னேறுவார்கள். அதன் பிறகு அவர்கள் இந்தப் பழைய காலகட்டத்தைத் திரும்பிப் பார்த்தால், 'அட, இதுக்கா அச்சப்பட்டோம்!' என்று சிரிப்பார்கள். ஆனால், செயற்கை நுண்ணறிவு என்பது அந்தத் தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது.
ஏனெனில், இங்கு மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிடப் போவதில்லை, அவர்கள் சிந்திக்கக்கூடிய இயந்திரங்களோடு போட்டியிட வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு போட்டியை இதற்கு முன் மனிதன் எதிர்கொண்டதில்லை. அதனால், இதன் எதிர்காலத்தைப் பற்றி அவனுக்குத் தெரியவில்லை. அது அவனை மேலும் அச்சுறுத்துகிறது.
எடுத்துக்காட்டாக, ஒருவர் மளிகைக்கடையில் பணிபுரிகிறார். அவருடைய வேலை, வாடிக்கையாளர்கள் வாங்குகிற பொருட்களை வீடு வீடாகச் சென்று கொடுக்க வேண்டும். இதற்காக அவருக்கு ஒரு மிதிவண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதை நன்கு பயன்படுத்தித் தன்னுடைய வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய கடை மிகப் பெரிதாக வளர்ந்துவிடுகிறது. 'இனிமே சைக்கிள்ல போய் டெலிவரி கொடுக்கிறதெல்லாம் சரிப்படாது. பைக் ஓட்டத் தெரிஞ்ச ஒருத்தரை வேலைக்குச் சேர்க்கப்போறேன்' என்கிறார் முதலாளி.
'வேண்டாம் முதலாளி. எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க. நானே பைக் ஓட்டக் கத்துக்கறேன்' என்கிறார் இவர், அதன்படி ஒரே வாரத்தில் இருசக்கர வண்டியை ஓட்டக் கற்றுக்கொண்டு தன்னுடைய வேலையைக் காப்பாற்றிக் கொள்கிறார். இல்லாவிட்டால், அவருடைய வேலை பைக் ஓட்டத் தெரிந்த இன்னொருவருக்கு சென்றிருக்கும்.
இன்னும் சில ஆண்டுகள் ஓடுகின்றன. அந்த மளிகைக்கடை மேலும் பெரிதாகிறது. 'இனிமே பைக்ல போய் டெலிவரி கொடுக்கிறதெல்லாம் சரிப்படாது. நான் ஒரு ட்ரோன் (பறக்கும் இயந்திரம்) வாங்கப்போறேன்' என்கிறார் முதலாளி.
இப்போது அந்தப் பணியாளர் என்ன செய்வார்? முன்பு அவரால் பைக் ஓட்டக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது ட்ரோனைப் போல் பறக்க முடியாதே! அடுத்த சில ஆண்டுகளில் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு குழப்பத்தைத்தான் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்கிறார்கள் வல்லுநர்கள்.
அதாவது, இப்போது மனிதர்கள் செய்கிற பல வேலைகளை செயற்கை நுண்ணறிவின் துணையோடு இயங்கும் கணினிகளோ மற்ற இயந்திரங்களோ செய்யத் தொடங்கிவிடும். மனிதர்களால் அவற்றுடன் போட்டியிடக்கூட முடியாது. நிறுவனங்களுக்கும் இவற்றில் முதலீடு செய்வதுதான் வசதியாகவும் சிக்கனமாக இருக்கும் என்பதால் இதற்குமுன் நாம் பார்த்திராத வேலையில்லாத் திண்டாட்டம் வரப்போகிறது என்பது இவர்களுடைய கணிப்பு.
பில்கேட்ஸ், ஒபாமா கருத்து.. இங்கு 'பணியாளர்கள்' என்று சொல்லப்படுவோர் அடிமட்ட வேலைகளைச் செய்கிறவர்கள் (Blue-collar Workers) மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் உள்ள எல்லாவிதமான வேலைகளையும் (White-collar Workers) செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, 'இன்றைய செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மென்பொருள் பொறியாளர்களைவிடச் சிறப்பாக மென்பொருள் எழுதுகின்றன' என்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 'இதுபோன்ற வேலைகளுக்கெல்லாம் ஆபத்து வரக்கூடும் என்று யாரும் இதுவரை கற்பனைகூடச் செய்ததில்லை.'
`ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற மிகுந்த திறமை தேவைப்படும் பணிகளைக்கூட வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கையிலெடுத்துக் கொண்டுவிடும்' என்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இதுவரை ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், குறிப்பாக முந்தைய ஓரிரு ஆண்டுகளுக்குள் அது நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல்களையும் பார்க்கும்போது இந்தக் கணிப்புகள் ஓரளவு உண்மைதான் என்று ஊகிக்கலாம்.
தொழிற்சாலைகளில்.. செயற்கை நுண்ணறிவு நுழையாத, அல்லது கட்டுப்படியாகாத இடங்களில்கூட, தானியங்கியாக்கம் (Automation) நுழைந்துவிடும். இங்கு ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இயந்திரங்கள் செயல்படுகின்றன. அவை சொந்தமாகச் சிந்திப்பது அடுத்த நிலை. அவ்வாறு சிந்திக்காவிட்டாலும் அவை அந்தச் செயலை நன்கு நிறைவேற்றிவிட்டால் போதும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தொழிற்சாலையில் வெவ்வேறு பகுதிகளை ஒன்றாகச் சேர்ப்பது, நட், போல்ட் போட்டு முடுக்குவது போன்ற வேலைகளை மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே விதிமுறைகளாக மாற்றி இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால், அவை நாள் முழுக்க அதே வேலையைச் செய்து கொண்டிருக்கும்.
இதுபோல் நாள்தோறும் நாம் செய்கிற பல வேலைகளைத் தானியங்கியாக்கத்தின் மூலம் விரைவாக்கலாம், சிறப்பாக்கலாம். இது ஏற்கெனவே நம்மைச் சுற்றி மெதுவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வருங்காலத்தில் இது இன்னும் விரைவாகப் பரவும். அதன்மூலம் பல வேலைகளுக்கு மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள்.
அதேநேரம் இந்த இயந்திரங்களின் மிகச் சிறப்பான செயல்திறனுக்கு வரம்புகள் உண்டு என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். அதாவது, அவற்றால் ஒரு வேலையைத் திரும்ப திரும்பப் பலமுறை சிறப்பாகச் செய்ய இயலும். அதைச் சற்று மாற்றியமைப்பது, அல்லது, அதில் ஏற்படக்கூடிய பிழைகளைப் புரிந்துகொண்டு திருத்துவது போன்றவற்றை அவற்றால் சமாளிக்க இயலாது. எனினும், செயற்கை நுண்ணறிவும் தானியங்கியாக்கமும் கை கோக்கும்போது இதிலும் பல முன்னேற்றங்கள் வரும் என்று ஊகிக்கலாம்.
மனித குறுக்கீடு தேவை.. ஆக, ஒரே வேலையைச் சோர்வின்றித் திரும்பத் திரும்பச் செய்வதில் தானியங்கியாக்கம் முன்னிற்கப் போகிறது. மனிதர்கள், அமைப்புகளின் பேச்சைப் புரிந்துகொள்வது, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது, பல இடங்களிலிருந்து தகவல்களைத் திரட்டுவது, அவற்றின் அடிப்படையில் அவர்களுடன் உரையாடுவது, மொழிபெயர்ப்பது போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு முன்னிற்கப் போகிறது.
எனினும், இவை கருவிகள்தான். வயலினையும் புல்லாங்குழலையும் வீணையையும் மிருதங்கத்தையும் சரியானபடி கோத்து நல்லிசையை உண்டாக்கக்கூடிய ஒரு கலைஞரைப்போல் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் திறமை வாய்ந்த மனிதர்கள் இனிமேலும் தேவைப்படுவார்கள்.
என்னதான் இயந்திரங்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு வேலைக்கான பணியோட்டத்திலும் (Workflow) மனிதக் குறுக்கீடு தேவைப்படுகிற பல புள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, வல்லுநர்களுக்கும் இன்னும் தேவை உள்ளது. அவர்கள் இந்தக் கருவிகளைத் தங்களுக்கான உதவியாளராகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் செயல்திறன் மிக்கவர்களாக ஆகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு நாளைக்கு இரண்டு அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தன் உதவியாளராகப் பயன்படுத்திக் கொண்டால் ஒரு மணி நேரத்தில் 4 அறுவைச் சிகிச்சைகளைச் செய்துவிடலாம்.
ஏனெனில், இப்போது இவர் செய்து கொண்டிருக்கிற பல வேலைகளை அந்த உதவியாளர் இன்னும் விரைவாகச் செய்துவிடும், அவற்றை இவர் மேற்பார்வையிடுவார், ஏதாவது தவறு செய்தால் திருத்துவார், தான் மட்டும் செய்ய வேண்டிய, தன்னால் மட்டும் செய்யக்கூடிய வேலைகளைத் தானே செய்துவிட்டு அடுத்த அறுவைச் சிகிச்சையை நோக்கிச் சென்று விடுவார்.
வேலைவாய்ப்பு பெருகும்: இங்கு ஒரு மனிதருடைய (மருத்துவர்), அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்துடைய (மருத்துவமனை) செயல்திறனைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மேம்படுத்துகிறது. அதனால், இப்படி யாரெல்லாம் தொழில்நுட்பத்தை உதவியாளராகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்களுடைய வேலைவாய்ப்பு பெருகும், குறையாது.
ஆக, நாம் கேட்க வேண்டிய கேள்விகள்: செயற்கை நுண்ணறிவை என்னுடைய வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யப் பயன்படுத்திக் கொள்வது எப்படி? அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நான் இன்னும் நன்றாகப் பணிபுரிவது எப்படி? என்னுடைய துறையில் இது தொடர்பாக என்னவெல்லாம் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன? அவற்றை நான் கற்றுக்கொள்ள என்ன வழி?
இந்தக் கேள்விகள் எல்லா வேலைகளைச் செய்கிறவர்களுக்கும் பொருந்தும். சிலருக்கு இவற்றின் பதில் சற்று கசப்பானதாகவும் இருக்கலாம். அதாவது, தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வேலை சிந்திக்கத் தெரிந்த ஓர் இயந்திரத்தால் செய்யக்கூடியதுதான் என்று அவர்கள் உணரலாம். அப்படிப்பட்ட வேலைகளுக்குத்தான் இந்தத் தொழில்நுட்பத்தால் உடனடி ஆபத்து இருக்கிறது.
தொடர்ந்து கற்க வேண்டும்: அப்போது, அவர்கள் உடனடியாகத் தங்களுடைய திறன் மேம்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். அதாவது, தங்களுடைய அனுபவம், திறமைகளைப் படிக்கல்லாகப் பயன்படுத்திக் கொண்டு அதே துறையில், அல்லது அது சார்ந்த இன்னொரு துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உதவியாளராகக் கொண்டு செயல்படும்விதமான ஒரு வேலைக்கு மாறுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், அதற்காகப் படிக்கவும், பயிற்சி பெறவும் தொடங்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, அந்த மளிகைக்கடைப் பணியாளரால் ட்ரோனைப் போல் பறக்க முடியாதுதான், ஆனால், அதை இயக்கக் கற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு அவர் வெயிலில் அலைந்து திரியாமல், நான்கைந்து ட்ரோன்களை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் அரிசி, பருப்பு டெலிவரி செய்யலாம்.
இதைக் கேட்பதற்கு மலைப்பாக இருக்கலாம். ஆனால், இன்றைய இணையத்தில் கிட்டத்தட்ட எல்லாப் புதிய தொழில்நுட்பங்களும் இலவசமாகவே படிக்கக் கிடைக்கின்றன. கற்க வேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருந்துவிட்டால் போதும். இயந்திரங்கள் தொடர்ந்து கற்கின்ற உலகத்தில் நாம் கற்கத் தயங்கினால் எப்படி? தொழில்நுட்ப முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
எனினும், 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற விதிப்படி தன்னுடைய திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டிருக்கிற மனிதனின் இயற்கை நுண்ணறிவு அதைப் பயன்படுத்திக் கொண்டு, அதோடு சேர்ந்து வளரும் என்று நம்புவோம்.
- nchokkan@gmail.com