ரத்தன் டாடா இந்தியர்களின் இதயம் கவர்ந்த தொழிலதிபர் ஆனது எப்படி?

By எல்லுச்சாமி கார்த்திக்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். தொழிலதிபரான அவர் இந்தியர்களின் இதயங்களை வென்றது எப்படி என பார்ப்போம்.

அக்.9 (புதன்கிழமை) மாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 86 வயதான ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைதான்’ என தனது ஹெல்த் அப்டேட்டை அவரே கொடுத்திருந்தார். இந்தச் சூழலில்தான் புதன்கிழமை பின்னிரவு அவர் காலமடைந்தார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவர் உயிரிழக்க காரணம்.

தன்னடக்கம், தனிவழி: டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.

பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர். ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க்’ என தனது சக்சஸ் மந்திரம் குறித்து அவர் சொல்வார். அதை அவர் வாழ்வின் இறுதிவரை தொடர்ந்தார்.

இன்று இந்தியாவில் அதிகமானவர்கள் பயன்படுத்தி வரும் பேடிஎம், லென்ஸ்கார்ட், ஓலா உள்ளிட்ட 50 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்.

இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்: கடந்த 2021-ல் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்தபோது, அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். ‘விருதுகளை காட்டிலும் இந்தியனாக இருப்பதே எனது அதிர்ஷ்டம்’ என அப்போது அவர் சொல்லி இருந்தார்.

இந்திய சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் டாடா நிறுவன வாகனங்களை கடந்தே பயணிக்க வேண்டி உள்ளது. அது தனது தொழில் சாம்ராஜ்யம் மூலம் மக்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட கனெக்ட்டிவிட்டி.

சமூகத்தின் மீதான நேசம்: வழக்கமாக தொழிலதிபர்கள் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்றுதான் இயங்குவார்கள். பெரும்பாலான தொழிலதிபர்களின் ஒவ்வொரு நகர்வும் தொழில் ரீதியானதாகவே இருக்கும். ஆனால், ரத்தன் டாடா அதற்கு விதிவிலக்கு. தொழில் துறையையும் கடந்து தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். அவரது நோக்கமும் செயலும் அப்படி இருந்து. IIFL Wealth Hurun India Rich List 2022 பட்டியலில் இந்திய பணக்காரர்களில் 421-வது இடம் பிடித்திருந்தார்.

‘டாடா டிரஸ்ட்ஸ்’ மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஆரோக்கியம், மருத்துவம், கிராமப்புற மேம்பாடு மற்றும் வாழ்க்கை மேம்பாடு சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு தந்தவர். இதில் டாடா குழும பங்குதாரர்களின் பங்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கிய தொண்டு நிறுவனங்களில் டாடா டிரஸ்ட்ஸ் உள்ளது.

கரோனா பேரிடரின்போது சுமார் 500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய கொடை உள்ளம் படைத்தவர். தான் படித்த ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பிரத்யேக மையம் நிறுவ 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியவர்.

கடந்த 2008-ல் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மறுவாழ்வுக்காக ‘தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை’-யை தொடங்கினார். பல்வேறு தருணங்களில் அவரது சமூகப் பணிக்காக புகழ்ந்து கொண்டாடப்பட்டவர் (கொண்டாடப்படுவார்). முக்கியமாக அவரை அனைவரும் எளிதில் அணுக முடியும். அந்த வகையில் தனது இயக்கத்தை அவர் கொண்டிருந்தார்.

கடந்த 2021-ல் இரண்டு ஆண்டு காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஊழியரை பார்க்க மும்பையிலிருந்து புனேவுக்குச் பயணம் செய்து நலம் விசாரித்தார். அவரது அந்த உன்னத செயலை கண்டுக்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் போற்றி இருந்தனர்.

பிராணிகள் நல ஆர்வலரான அவருக்கு நாய்கள் என்றால் அதிகம் பிடிக்கும். அதன் காரணமாகவே மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் தெரு நாய்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள நாய்களை பராமரிக்க ஒரு குழுவும் உள்ளது. அது மட்டுமல்லாது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ‘பருவமழை காலத்தில் சாலையில் நாம் பார்க் செய்யும் கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் அதன் கீழே ஏதேனும் விலங்குகள் உள்ளனவா என்பதை பார்க்க வேண்டும். இதன் மூலம் வீடற்ற வாயில்லா ஜீவன்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்’ என சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாய்கள் மீதான நேசத்தின் ஊடாக தனது உதவியாளர் சாந்தனு நாயுடுவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தெரு நாய்களுக்கு ஒளிரும் கழுத்து பட்டையை அணிய செய்யும் ‘Motopaws’ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் சாந்தனு ஈடுபட்ட போதுதான் ரத்தன் டாடாவை சந்தித்தார், பின்னர் அவரது உதவியாளர் ஆனார்.

மூத்த குடிமக்களுக்கு உதவும் உறுதுணை (Companionship) சேவையை வழங்கி வரும் 'Goodfellows' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் கடந்த 2022-ல் அவர் முதலீடு செய்தார். இதை சாந்தனு நாயுடு நிறுவியது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக அவரது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு உள்ளங்களையும் ஈர்த்தது. அதன் காரணமாகவே 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் கொண்டாடப்படும் தொழிலதிபர்களில் முதன்மையானவராக உள்ளார். பூவுலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது பேரை சொல்லும் வகையில் டாடா குழுமம் அவர் விட்டு சென்ற பணிகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

45 mins ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்