மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் ஆய்வு பட்டம் பெறலாம்

By மிது கார்த்தி

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அரசின் நிறுவனமாகும். மதுரை தல்லாகுளம் பகுதியில் 14.15 ஏக்கர் நிலப்பரப்பில் 87,300 சதுர அடியில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. அங்கு நிர்வாகப்பிரிவு, ஆய்வுப்பிரிவு, 50,000க்கும் மேற்பட்ட நூல்களுடன் குளிரூட்டும் வசதியுடனான நூலகம், அயலகத் தமிழ் நூல்களுக்கெனத் தனிப்பிரிவாக 'அயலகத் தமிழ்ப் புத்தகப் பூங்கா', தகவல் மையம் உள்ளிட்டவற்றுடன் கலையரங்கம், கூட்ட அரங்கங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

உலகத் தமிழ்ச் சங்கம் 2015இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், துணைவேந்தரின் ஆணையின்படியும், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படியும் முழு / பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 8 பேருக்கு நெறியாளராகச் செயலாற்றலாம் எனத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.

அத்துடன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உயராய்வு மையமாகச் செயல்பட உலகத் தமிழ்ச் சங்கம் அங்கீகரிக்கப்பட்டு, 2024 ஜனவரி 9 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலகத் தமிழ்ச் சங்கத்தில் 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுகளை முழு நேரமாகவும் / பகுதி நேரமாகவும் மேற்கொள்ளலாம். முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருண்மைகள் தமிழ் இலக்கியம், அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம், ஒப்பிலக்கியம் சார்ந்த பொருண்மை குறித்து மேற்கொள்ளப்படலாம்.

இதற்கு தமிழில் முதுநிலையில் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரம் (Grade) பெற்றிருக்க வேண்டும். பட்டியல் / பழங்குடி இனத்தவர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினர் முதுநிலையில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தும் ஆய்வுப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வில் (TURCET) தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தகுதித் தேர்வு (NET) / மாநிலத் தகுதித் தேர்வு (SET) / மாநில அளவிலான தகுதித் தேர்வு (SLET) / இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (JRF) தேர்வில் தகுதிப் பெற்றவர்களும் முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற வெளிநாடு வாழ் தமிழர்கள் (NRI) நேரடியாக முனைவர் பட்ட ஆய்வுப்படிப்பில் சேரலாம். இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் உதவித்தொகை (ICCR), பிற நல்கை பெற்ற அயலக மாணவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். அயலக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் ஓர் ஆண்டின் எந்த நேரத்திலும் இருக்கக்கூடிய இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், கட்டணம் தொடர்பான விவரங்களை அறிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வலைத்தளமான www.tamiluniversity.ac.in பார்வையிடலாம். மேலும் utsmdu.research@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியிலோ, 0452-2530799, 8110016911 என்கிற தொலைபேசி மூலமாகவோ தகவல்களைப் பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE