தமிழ் நவீனக் கவிதை இரு வேறு இயக்கங்களாக முன்னெடுக்கப்பட்டது. ‘எழுத்து’, ‘வானம்பாடி’ ஆகிய இரு இதழ்கள் வழி இந்த இயக்கம் நடைபெற்றது. இன்றும் நவீனக் கவிதையை வரையறுக்கும்போது இந்த மரபுத் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். புவியரசு, மு.மேத்தா, நா.காமராசன், இன்குலாப் என வானம்பாடி மரபின் தொடர்ச்சியைப் போல் சி.சு.செல்லப்பா, பசுவய்யா, நகுலன், பிரமிள், தேவதச்சன் என எழுத்து மரபும் இன்றும் தொடர்ந்துவருகிறது. இந்த வரிசையில் கவிஞர் பொன்முகலியை எழுத்து மரபின் கண்ணி என வரையறுக்கலாம்.
தொண்ணூறுகளுக்குப் பிறகு எழுதவந்த பெண் கவிஞர்கள் பலரும் உரத்துச் சொன்ன உடலரசியல் இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த முகலியிடமும் இருக்கிறது. அதைச் சொல்ல எண்பதுகளின் இறுதியில் எழுதிய சுகந்தி சுப்பிரமணியனின் தணிவை, முகலி தன் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், சுகந்தியின் அந்தக் கவிதைகள் பெண் என்கிற இருப்பைத் திடமாக வெளிப் படுத்துபவை. முகலியின் கவிதைகள் அந்த எல்லையைச் சாதாரணமாகத் தாண்டும் இயல்பைக் கொண்டவை. இதுவே இவரது விசேஷமான அம்சம். பெண்ணுக்கு எதிராகக் குற்றங்கள், சுற்றுச்சூழலைப் போல் மோசமடைந்துவரும் காலகட்டத்தைப் பற்றிய இவரது கவிதை ஒன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மண்சட்டி சுமந்தாலும், விண்கலம் சென்றாலும் பெண், பெண்தான் எனப் பெண்ணின் உடலை முன்வைத்து இந்தக் கவிதை பேசுகிறது: ‘அவள் உயிர் ஒரு சிலுவையைப் போல்/ அவள் உடலில் அறையப்பட்டு இருக்கிறது/...புனிதம் ஒரு வன்முறையைப் போல்/கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிற தேசத்தில்/ஒரு பெண்/எப்போதும் பெண்ணாகவேதான் இருக்கிறாள்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்