திரை நூலகம்: வாழ்க்கையும் இசையும்!

By ரசிகா

திரையிசை உலகில் ‘மாமா’ எனப் பாசமுடன் அழைக்கப்பட்டவர் ‘திரையிசைத் திலகம்’ கே.வி.மகாதேவன். அவரைக் குறித்தும் அவரது இசைப் பங்களிப்பு குறித்தும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால், கர்னாடக சங்கீதத்திலும் மேற்கத்திய இசையிலும் அவர் கொண்டிருந்த ஞானத்தை அறிந்தவர்கள், அவர் கம்போஸ் செய்த பாடல்களை நுணுக்கமாக எடுத்துக்காட்டி விளக்கும்போது, சுவாரஸ்யமான வாசிப்புக்கு வழி பிறந்துவிடுகிறது.

அப்படியொரு ரசனையான வாசிப்பைச் சாத்திய மாக்குகிறது பி.ஜி.எஸ். மணியன் எழுதியிருக்கும் இந்நூல். தமிழ் திரையிசையின் பொற்காலத்தைச் சிருஷ்டித்த மூத்த இசையமைப்பாளர்கள் பலரையும் குறித்துக் கடந்த இரண்டு பத்தாண்டுகளாக எழுதி வரும் இவர், இந்து டாக்கீஸ் இணைப்பிலும் இந்து தமிழ் இணையதளத்திலும் எழுதிய தொடர்கள் வரவேற்பைப் பெற்றவை. கோவையைச் சேர்ந்த அவர், கே.வி.மகாதேவன் குறித்து அந்திமழை இதழில் எழுதியிருந்த தொடரே தற்போது 432 பக்க நூலாக வெளிவந்திருக்கிறது.

இதில் கே.வி.மகாதேவனின் திரையிசைப் பற்றியும் அவரது தொடக்கக் கால வாழ்க்கை பற்றியும் ஒரு சிறந்த சித்திரத்தை வழங்கியிருக்கிறார். அவற்றில் கே.வி.மகாதேவன் இசையமைப்பாளராக முகிழ்த்த தருணமும் அவரது புகழ்பெற்ற பாடல்கள் பிறந்த பின்னணியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும் பதிவாகியிருக்கின்றன.

அவை பெரும்பாலும் இதுவரை அறிந்திராத தகவல்களாக இருப்பது, வாசிப்பை ஊக்கப்படுத்துகிறது. இவ்வளவு பெரிய புத்தகத்தில் போதிய அளவுக்கு ஒளிப்படங்கள் இல்லாதது ஏமாற்றம். அந்தக் குறையை கே.வி.மகாதேவனின் ராக ஆளுமையை, தேர்ந்தெடுத்த அவரது வெற்றிப் பாடல்கள் வாரியாக ஆராய்ந்து எழுதியிருப்பதன் மூலம் நேர் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

ஒரு சாதனைச் சரித்திரம்

பி.ஜி.எஸ்.மணியன்

விலை: ரூபாய் 450

வைகுந்த் பதிப்பகம்,

நாகர்கோவில்.

தொலைபேசி: 9385487268

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE