WTC Final | கோலியின் ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: ரிக்கி பாண்டிங்

By ஆர்.முத்துக்குமார்

வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்திய அணி வீரர் விராட் கோலியின் அபார ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன.

“இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள். கடந்த காலங்களில் புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார். இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஆடுகளமும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போல இருக்கலாம். அதனால் புஜாராவை விரைவாக அவுட் செய்வது அவர்களது இலக்காக இருக்கும்.

கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸி. அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. தனது சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்” என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,979 ரன்கள் குவித்துள்ளார். கோலியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் 1,979 ரன்கள் எடுத்துள்ளார். இளம் வீரர் சுப்மன் கில்லும், ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE