IPL 2023 | இது தோனிக்காக எழுதப்பட்ட விதி; நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்: ஹர்திக் பாண்டியா

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: இது தோனிக்காக எழுதப்பட்ட விதி; நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.

இந்த நிலையில் மழையின் காரணமாக சிஎஸ்கே அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கு தீர்மானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் இலக்கை அடைத்து த்ரில் வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு குஜராத் டைட்டான்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்போது, “ எங்களுக்கு என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதாவது நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம் .. இல்லை என்றால் ஒன்றாக தோல்வி அடைவோம். நான் எந்த சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. சிஎஸ்கே சிறப்பாக விளையாடினார்கள். நாங்களும் சிறப்பாக விளையாடினோம். குறிப்பாக சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் சிறப்பாக விளையாடுவது எளிதல்ல. நாங்கள் வீரர்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து சிறந்ததைப் பெற முயற்சித்தோ. இதில் கிடைக்கும் வெற்றி அவர்களின் வெற்றிதான். ராஷித் கான், ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். நாங்கள் அணியாக சிறப்பாக விளையாடினோம். இதயபூர்வமாக விளையாடினோம். இதனை நினைத்து நாங்கள் பெறுமை கொள்கிறோம். தோனியின் அணி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முடிவு தோனிக்காக எழுதப்பட்டுள்ளது.

ஒருவேளை நான் தோற்க வேண்டும் என்றால், அது தோனியிடம் என்றால் அதற்கு நான் கவலைப்பட போவதில்லை. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். " என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE