ஷுப்மன் கில் 890 முதல் தோனி 250 வரை - ஐபிஎல் 2023 சுவாரஸ்ய உதிரிகள்

By செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள், விக்கெட்கள், சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.

ஷுப்மன் கில் 890: ஐபிஎல் வரலாற்றில் ஓர் சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த சீசனில் அவர், 17 ஆட்டங்களில் 890 ரன்கள் குவித்துள்ளார். இந்த வகை சாதனையில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். அவர், 2016-ம் ஆண்டு சீசனில் 973 ரன்களை வேட்டையாடி இருந்தார்.

சிக்ஸர், பவுண்டரி வேட்டை: ஐபிஎல் வரலாற்றில் ஓர் சீசனில் அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் குஜராத் அணியின் ஷுப்மன் கில் 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த சீசனில் அவர், 33 சிக்ஸர்கள், 85 பவுண்டரிகளை விரட்டி இருந்தார். இந்த வகை சாதனையில் கடந்த 2022-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் 45 சிக்ஸர்கள், 83 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இறுதிப் போட்டியில் 56 ரன்கள்: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களை வீசி 56 ரன்களை தாரை வார்த்தார். ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் பந்து வீச்சாளர் ஒருவர் அதிக ரன்களை வழங்குவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ல் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஷேன் வாட்சன் 61 ரன்களையும், 2021-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக கொல்கத்தாவின் லாக்கி பெர்குசன் 56 ரன்களையும் விட்டுக் கொடுத்திருந்தனர்.

இறுதிப் போட்டியில் அதிகம்: ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை குஜராத் அணி படைத்துள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் அணி 214 ரன்கள் குவித்தது. இந்த வகையில் 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பெங்களூருக்கு எதிராக ஹைதராபாத் அணி 208 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.

எம்.எஸ்.தோனி 250: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி எம்எஸ் தோனிக்கு 250-வது ஆட்டமாக அமைந்தது. இதுவரை தோனி 5,082 ரன்களை 39.09 சராசரி மற்றும் 135.96 ஸ்டிரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். 24 அரை சதங்கள் அடங்கும். 349 பவுண்டரிகள், 239 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். விக்கெட்கீப்பிங்கை பொறுத்தவரையில் 142 கேட்ச்கள் செய்ததுடன், 42 பேரை ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய உதவி செய்துள்ளார். கேப்டனாக 5 கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். இறுதிப் போட்டியில் கேப்டனாக 10 முறை அணியை வழிநடத்தி உள்ளார்.

தோனியும் இறுதிப்போட்டியும்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 11 முறை இறுதிப் போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமையை பெற்றார்
தோனி. அவர், 10 முறை சிஎஸ்கே அணிக்காகவும், ஒரு முறை புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 8 முறை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

டாப் 5 ரன் வேட்டை

டாப் 5 பந்து வீச்சு

ரயில் நிலையத்தில் தூங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதுவதாக இருந்தன. இந்த போட்டியை காண மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். ஆனால் திடீரென பெய்த கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டி ரத்து அறிவிப்பு சுமார் இரவு 11 மணி அளவிலேயே வெளியிடப்பட்டது. இதனால் போட்டியை காண சென்றிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனினும் மாற்று நாளான திங்கள்கிழமை (நேற்று) இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் போட்டியை காணும் ஆவலில் ரசிகர்கள் ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் படுத்து உறங்கினார்கள். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் பெரும்பாலானோர் சிஎஸ்கே அணியின் மஞ்சள் சீருடையை அணிந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE