IPL 2023: MI vs GT | சிக்ஸர்களால் மும்பையை காயப்படுத்திய ‘கில்’ - ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த குஜராத்

By செய்திப்பிரிவு

அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்களை குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 7.30 மணி அளவில் தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா 18 ரன்களில் 6வது ஓவரில் அவுட்டானார்.

இதன்பின் தனியொரு ஆளாக நின்று மும்பையின் பந்துகளை பஞ்சுகளாக்கி பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் சுப்மன் கில். ஆறாவது ஓவரில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை பின்பு அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். காரணம் 49 பந்துகளில் 100 ரன்களை வெளுத்த சுப்மன் கில் 10 சிக்ஸர்களால் மட்டுமே அந்த ரன்னை சாத்தியமாக்கினார். கட்டுப்படுத்த முடியாத கில்லை ‘யாராவது கட்டுப்படுத்துங்கள்’ என ரோஹித் ஷர்மாவின் குரல் ஆகாஷ் மத்வாலுக்கு கேட்க அவர் வீசிய 17வது ஓவரில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி தனது ருத்ரதாண்டவத்துக்கு தானே முற்றுப்புள்ளி வைத்துகொண்டார் கில். 60 பந்துகளில் 129 ரன்கள் என்பது நிச்சயம் மும்பைக்கு அவ்வளவு நல்ல செய்தியல்ல.

சாய் சுதர்சன் ஒருபுறம் தன் பங்குக்கு அடிக்க, அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த ஹர்திக் பாண்டியா கேப்டனுக்கான பொறுப்புடன் ஆடினார். ரிட்டையர்ட் அவுட் முறையில் சாய்சுதர்சன் 43 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த 233 ரன்களை குவித்தது. ஐபிஎல் ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி தரப்பில் ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE