சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், குஜராத் அணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் தான் என்றுமே தோனியின் ரசிகன் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இடையிலான பிணைப்பு குறித்து சொல்லவே வேண்டாம். அதனை பலமுறை களத்தில் நாம் நேரடியாக பார்த்துள்ளோம். இந்த சூழலில் ஹர்திக், தோனி குறித்த தனது நினைவுகளை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
“பெரும்பாலானவர்கள் தோனி மிகவும் சீரியஸான நபர் என எண்ணலாம். நான் அவரிடம் ஜோக் அடிப்பேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது அனைத்தும் நேர்மறையானவை. அவரிடம் பேசாமல், வெறுமனே பார்த்து மட்டுமே கற்றுக் கொண்ட விஷயங்கள் இவை. அவர் எனக்கு நல்ல நண்பர், சகோதரர். நான் என்றுமே மகேந்திர சிங் தோனியின் ரசிகன் தான். அவரை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும்” என பாண்டியா தெரிவித்துள்ளார்.
குவாலிபையர் 1 போட்டியை பொறுத்தவரையில் இரு அணியும் பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. சுழல், வேகப்பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு அணிகளும் முக்கிய வீரர்களை கொண்டுள்ளன. இந்தப் போட்டி நடப்பு சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னோட்டம் போல அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
» IPL 2023 | 'இலக்கை எட்ட முடியவில்லை; ஆர்சிபி-யை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி' - கோலி ட்வீட்
» 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்