IPL 2023 | சிஎஸ்கே-வுக்கு எதிராக ரெயின்போ ஜெர்சியில் களம் காணும் டெல்லி கேபிடல்ஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் டெல்லி அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சீசன் முதல் இந்த வழக்கத்தை டெல்லி அணி கொண்டுள்ளது.

சீசனின் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் இந்த ரெயின்போ ஜெர்சியை டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள். இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய எந்தவொரு போட்டியிலும் டெல்லி தோல்வியை தழுவியது இல்லை. 2020 சீசனில் பெங்களூரு, 2021 சீசனில் மும்பை, 2022 சீசனில் கொல்கத்தா அணியை வீழ்த்தி உள்ளது டெல்லி.

நடப்பு சீசனை பொறுத்தவரையில் டெல்லி அணி முதல் சுற்றோடு வெளியேறுகிறது. நாளை, டெல்லி விளையாடும் போட்டியே நடப்பு சீசனில் அந்த அணியின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது. சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அப்படி இல்லாத பட்சத்தில் பிற போட்டிகளின் வெற்றி - தோல்வியை பொறுத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அமையும்.

புள்ளிகளைப் பொறுத்த வரையில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் தலா 15 புள்ளிகள் எடுத்துள்ளன. அதே போல பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தலா 14 புள்ளிகளுடன் உள்ளன. சென்னை, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு லீக் சுற்றில் தலா ஒரு போட்டிகள் உள்ளன. அனைத்து அணிகளும் வெற்றியை இலக்காக வைத்துள்ளன. இருந்தாலும் இதில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு 3 அணிகளுக்கு மட்டுமே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE