ஹைதராபாத்: உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கு அறவே தெரியவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சையை எழுப்பி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வீசப்பட்ட போது மார்க்ரம் இதனை தெரிவித்திருந்தார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான். அதிவேக பந்து வீச்சுக்காக பரவலாக அறியப்படுபவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் 7 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் ஏன் விளையாடவில்லை என்ற கேள்விக்கு மார்க்ரம் பதில் அளித்தார்.
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்ன நடக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான். இருந்தும் அவரது விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை” என மார்க்ரம் தெரிவித்தார். அவரது இந்த பதில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட வார்னர், 2021 சீசனின் போதே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அந்த சீசனில் ஆடும் லெவனிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.