IPL 2023: CSK vs KKR | சிஎஸ்கேவை கட்டுப்படுத்திய சுழல் கூட்டணி - கொல்கத்தாவுக்கு 145 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 144 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, வழக்கம்போல் கெய்க்வாட் - கான்வே இணை துவக்கம் கொடுத்தது. இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 17 ரன்கள் எடுத்திருந்த கெய்க்வாடை வெளியேற்றினார். இதன்பின் வந்த 16 ரன்களில் ரஹானேவையும் சக்கரவர்த்தி தனது சுழலால் வீழ்த்த, சிறிதுநேரத்தில் கான்வேவும் 30 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

மிடில் ஆர்டரில் வந்த அம்பதி ராயுடுவையும் (4 ரன்கள்), மொயீன் அலியையும் (1 ரன்) ஒற்றை இலக்கத்தில் சுனில் நரைன் ஒரே ஓவரில் அவுட் ஆக்கினார். இதன்பின் ஷிவம் துபே பொறுப்புடன் விளையாடினார்.

கேப்டன் கடைசி இரண்டு பந்துகளைச் சந்தித்தார். ஆனால் இம்முறை அவரால் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே அதிகபட்சமாக 48 ரன்களைச் சேர்த்தார்.

கொல்கத்தாவின் சுழல் கூட்டணி வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் இருவரும் சேர்ந்து சென்னை அணியை பெரிய ரன்கள் குவிக்கவிடாமல் தடுத்தது. இருவரும் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். குறிப்பாக சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE