ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் மெஸ்ஸி!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை வென்றார் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற Laureus விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை மற்றும் அணிக்கு Laureus விருது வழங்கப்பட்டு வருகிறது. 2000-மாவது ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அதனால் ஆண்டின் சிறந்த அணிக்கான விருதை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் தனிநபர் மற்றும் அணி என இரண்டு விருதினை மெஸ்ஸி இந்த முறை வென்றுள்ளார். கடந்த 2020-ல் லூயிஸ் ஹாமில்டனுடன் இணைந்து சிறந்த விளையாட்டு வீரருக்கான Laureus விருதை மெஸ்ஸி பெற்றிருந்தார்.

ஜமைக்காவின் தடகள வீராங்கனை ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார். டென்மார்க்கின் கால்பந்தாட்ட வீரர் எரிக்சன் களத்தில் கம்பேக் கொடுத்தமைக்காக ‘கம்பேக் ஆப் தி இயர்’ விருதை வென்றார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் ‘பிரேக் த்ரூ ஆப் தி இயர்’ விருதை வென்றார்.

ஃப்ரீஸ்டைல் ஸ்கையரான அமெரிக்காவின் 19 வயது வீராங்கனை எலைன் கு, ஆக்ஷன் விளையாட்டு பிரிவில் விருது பெற்றார். கேத்தரின் டெப்ரன்னர், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை பிரிவில் விருது பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE