ஐபிஎல் போட்டியில் மேலும் ஒரு வருடம் தோனி விளையாடுவார்: சுரேஷ் ரெய்னா

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் தோனி விளையாடுவார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசன் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ‘தோனியின் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு சார்ந்த திட்டம் என்ன?’ என்பது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு மேலும் ஒரு வருடம் விளையாடுவேன்’ என தோனி தன்னிடம் தெரிவித்ததாக ரெய்னா தெரிவித்துள்ளார். அண்மையில் தோனியை சந்தித்த போது அவர் தன்னிடம் இதை பகிர்ந்து கொண்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் இந்த வார்த்தைகள் சென்னை அணிக்காக 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முடிவோடு அவர் இயங்கி வருவதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

அண்மையில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ‘இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை’ என வர்ணனையாளரிடம் தோனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அது முதல் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். தோனியின் தலைமையின் கீழ் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் அரங்கில் அதிகம் விளையாடியவர் ரெய்னா. அவர் தோனியின் படை தளபதிகளில் ஒருவர் என்றும் வர்ணிக்கப்படுபவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE