காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்: உறுதி செய்த எல்எஸ்ஜி

By செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் காயமடைந்தார். அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாக அறிவித்துள்ளது. அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்றும் தெரிந்து கொண்டதாக லக்னோ அணி தெரிவித்துள்ளது. அவரை இந்த நேரத்தில் அதிகம் மிஸ் செய்வதாக லக்னோ அணி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அவருக்கு தேவையான ஆதரவை லக்னோ அணி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 274 ரன்களை ராகுல் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 34.25. இரண்டு அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். லக்னோ அணியின் மற்றொரு வீரரான உனத்கட் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குள் கே.எல்.ராகுல் இந்த காயத்தில் இருந்து மீண்டு, போதுமான உடற்தகுதியை பெறுவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது. அவர் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஏற்கனவே காயத்தால் பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் ராகுலும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE