நினைவிருக்கா | 2009-ல் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருதை விட்டுக் கொடுத்த கம்பீர்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் பெங்களூரு வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு பெங்களூரு வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ ஆலோசகர் கவுதம் கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதித்தது ஐபிஎல். அவர்கள் இருவரும் களத்தில் அப்படி நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க செய்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வீரர்களான கோலி மற்றும் கம்பீர் இப்படி செய்யலாமா எனவும் ரசிகரகள் விமர்சித்திருந்தனர். அவர்கள் இருவரும் இதற்கு முன்னர் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு தருணங்களில் மல்லுக்கு நின்றுள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 2009-ல் அவர்கள் இருவருக்கும் இடையிலான இணக்கமான சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 316 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

அதில் சேவாக், சச்சின் என இருவரும் விரைந்து ஆட்டமிழக்க கம்பீர் மற்றும் கோலி இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 224 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்தப் போட்டியில் கம்பீர், 137 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகமால் இருந்தார். கோலி, 114 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதுதான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கோலி பதிவு செய்து முதல் சதம்.

இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக கம்பீர் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரோ முதல் சதம் விளாசிய கோலிக்கு அந்த விருதை விட்டுக் கொடுத்தார். அதோடு கோலி விருதை பெற்ற போது கம்பீர் கைத்தட்டி ஊக்கம் கொடுத்தார். அதன்பின்னர் கடந்த 2013 முதல் ஐபிஎல் அரங்கில் இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் ஆடுகளத்தில் அனல் பறக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE