அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 130 அணி ரன்களைச் சேர்த்தது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், இன்றைய 44வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்படியொரு மோசமான தொடக்கம் டெல்லிக்கு அமைந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு முதல் பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டானார். அடுத்த ஓவரில் டேவிட் வார்னர் ரன் அவுட். 3-வது ஓவரில் ரிலீ ரோசோவ் அவுட்.
அடுத்து பிரியம் கார்க் என முதல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 23 ரன்களை மட்டுமே சேர்த்தது டெல்லி. அமன் ஹக்கீம் கான் - அக்சர் படேல் இணைந்து ஸ்கோர்களை உயர்த்தினர். ஆனாலும் அக்சர் படேல் 27 ரன்களிலும், அமன் ஹக்கீம்கான் 51 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 130 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் தரப்பில் முஹம்மது சமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.